இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்... நேற்றிரவு விவசாயிகளை சந்தித்த அமித்ஷா..!
டெல்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 13 பேரை மட்டும் சந்தித்து பேசியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இந்த சந்திப்பு முதலில் அமித்ஷா இல்லத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் இடம் மாற்றப்பட்டது. இதில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விவசாயிகளிடம் அமித்ஷா விரிவாக எடுத்துரைத்தார் எனத் தெரிகிறது.

விவசாயிகள் கோரிக்கையான புதிய விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்து அமித்ஷா இந்தச் சந்திப்பில் எதுவும் கூறாதது கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதன் காரணமாக அகில இந்திய கிஸான் சபா தலைவர் ஹனன் மொல்லா அமித்ஷாவுடனான சந்திப்பை பாதியில் முடித்துக்கொண்டு வெளியேறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிவதாகவும் இதனால் இன்று மத்திய அரசுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை எனவும் கூறினார்.
மேலும் சிங்கு எல்லை (டெல்லி-ஹரியானா எல்லை) பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் இன்று நண்பகல் 12 மணிக்கு கலந்துபேசி அடுத்தக்கட்ட முடிவு குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.
அமித்ஷாவை சந்தித்த 13 விவசாய சங்க பிரதிநிதிகளில் 8 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 5 பேர் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இரவு 8 மணிக்கு தொடங்கிய சந்திப்பு சுமார் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது.
இதனிடையே இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இந்த விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications