அனந்த்குமார் மரணம்.. கர்நாடகத்திற்குப் பேரிழப்பு.. காவிரிக்காக தீவிரமாக போராடியவர்!
Recommended Video
டெல்லி: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு சாதகமாக எதுவும் நடந்து விடாமல் தான் சார்ந்த கர்நாடகத்திற்கு ஆதரவாக, மத்தியில் தீவிரமாக பாடுபட்டவர் மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமார்.
கர்நாடக காவிரி பாசனப் பகுதி மக்களால் மறக்க முடியாத ஒரு தலைவர் அனந்த் குமார். பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இல்லாத போதும் சரி, கர்நாடகத்தின் முக்கிய விவகாரமான காவிரிப் பிரச்சினையில் தனது மாநிலத்திற்காக தீவிரமாக பாடுபட்டவர் அனந்த் குமார்.
கர்நாடகாவிலிருந்து வரும் அனைத்துக் கட்சிக் குழுக்களில் தவறாமல் இடம் பெற்று, கட்சி பாகுபாடின்றி, மாநில நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டவர் அனந்த் குமார்.
தேர்தலில் ஒருமுறை கூட தோற்காத அனந்த்குமார்.. புற்றுநோயிடம் தோற்ற சோகம்.. பாஜகவின் மகுடம் இவர்!
வாரியத்திற்குப் பதில் ஆணையம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் காவிரிப் பிரச்சினையில் அனல் வீசியது. உச்சநீமன்றம் காவிரி வழக்கில் இறுதித் தீர்ப்பை அளித்தது. அந்தத் தீர்ப்பு தமிழகத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தீர்ப்பின்போது காவிரி மேலாண்மை வாரியத்திற்குப் பதில் ஆணையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.
நெருக்குதல் - லாபி
காவிரி மேலாண்மை வாரியம் அமைய விடாமல் மத்திய அரசை தடுத்து ஆணையம் என்ற பரிந்துரைக்கு மத்திய அரசை வரவைத்ததில் அனந்த் குமாரின் பங்கு மிக முக்கியமானது. இவர் மற்றும் கர்நாடக அனைத்துக் கட்சிக் குழுவினரின் நெருக்குதல்கள் மற்றும் தீவிர லாபியால் மத்திய அரசும் தமிழகத்திற்கு எதிரான மன நிலைக்கு போனது.
கர்நாடகத்திற்கு இழப்பு
உண்மையில் அனந்த்குமாரின் மறைவு, கர்நாடகத்திற்கு பெரும் இழப்புதான் காவிரி விவகாரம் என்றில்லாமல், பல்வேறு மாநிலம் சார்ந்த பிரச்சினைகளுக்காக டெல்லியில் தீவிரமாக குரல் கொடுத்து அதை சாதிப்பதிலும் வெற்றி கண்டவர் அனந்த் குமார். கர்நாடக பாஜகவுக்கும் கூட இவரது மறைவு பெரும் இழப்புதான்.
தமிழகத்திற்கும் இவர் போல கிடைத்திருந்தால்
தமிழகத்திற்கு அனந்த் குமார் போல ஒரு அமைச்சர் கூட மத்தியில் இதுவரை அமைந்ததில்லை. அனந்த் குமார் போன்ற ஒரு தலைவர் தமிழகத்திற்கும் கிடைத்திருந்தால் தமிழகமும் கூட பல நல்ல வளங்களை மத்தியிலிருந்து பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.