இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு.. சராசரியாக 1,827 பெண்கள் கடத்தப்படுகின்றனர்.. அதிர வைக்கும் டேட்டா
டெல்லி: இன்று மனிதர்களை கடத்தும் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் இப்படி ஒரு தினம் இருக்கிறது. அது உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதே அநேக மக்களுக்கு தெரிந்திருக்கக்கூட வாய்ப்பில்லை. ஆனால் இன்று காலை திமுக எம்.பி கனிமொழி இந்த தினம் தொடர்பாக ஒரு டிவீட்டை பதிவிட்டிருந்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
"மனிதர்களை கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று. இது போன்ற வன்முறைகள் நடக்காதவாறு அனைத்து வழிகளிலும் கவனத்துடன் செயல்படுவோம். இதை முற்றிலும் ஒழிக்க, இது குறித்த உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்" என கனிமொழி எம்.பி டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். சரி இந்த ஆட்கடத்தல் என்பது பலர் அறிந்திருந்தாலும் அது நமது சமூகத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?

ஆய்வு
ஆட்கடத்தல் குறித்து கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சில தரவுகளை ஐநா வெளியிட்டுள்ளது. இதன்படி உலக அளவில் கடத்தப்படும் மனிதர்களில் 46% பெண்கள்தான் உள்ளனர். மேலும் 20% ஆண்களும், 15% சிறுவர்களும், 19% சிறுமிகளும் உள்ளனர். அதாவது ஓராண்டில் மட்டும் சுமார் 100 பேர் கடத்தப்படுகிறார்கள் எனில் அதில் 46 பேர் பெண்கள்தான். வளர்ந்து வரும் மனித சமூகத்தை இந்த ஆட்கடத்தல் கும்பல்கள் எப்படி பின்னோக்கி மீண்டும் நகர்த்துகிறது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் ஓர் எடுத்துக்காட்டு.

பாலியல் சுரண்டல்
இதில் அதிர்ச்சியளிக்கக்கூடிய விசயம் என்னவெனில் இவ்வாறு கடத்தப்படும் பெண்களில் 77% பேர் பாலியல் சுரண்டலுக்காகவே திட்டமிட்டு கடத்தப்படுகின்றனர். அதேபோல சிறுமிகளை பொறுத்த வரையில் 72% சிறுமிகள் பாலியல் தேவைகளுக்காகவும், 21% சிறுமிகள் குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றவும் கடத்தப்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் மற்றும் சிறார்கள் கடத்தல்களின் முக்கிய நோக்கம் அடிமைத் தொழிலாளியாக மாற்றுவதற்காகத்தான் என்பது ஐநாவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர இவர்களை கொண்டு குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது, பிச்சை எடுக்க வைப்பது, திருமணம் செய்து வைப்பது, அவர்களது உள்ளுறுப்புக்களை திருடுவது என பல செயல்களை கடத்தல்காரர்கள் செய்கின்றனர்.

அமெரிக்கா
மேலே குறிப்பிட்டதைப்போல கடத்தப்படுபவர்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம் இல்லையா? இது உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிகமாக நடக்கிறது என்றும் ஐநா குறிப்பிட்டுள்ளது. அதாவது மற்ற நாடுகளில் கடத்தப்படுபவர்கள் அதிகம் பாலியல் சுரண்டலில்தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். உதாரணமாக 10,000 பேர் கடத்தப்படுகிறார்கள் எனில் அதில் 7,000 பேர் பாலியல் சுரண்டலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுக்கு மட்டும் பொருந்தும். ஆனால் இதே அமெரிக்காவில் ஏறத்தாழ 9,000 பேர் இவ்வாறு பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அமெரிக்கா ஒரு வல்லரசு நாடு என்பதை நான் நினைவில்கொள்ள வேண்டும்.
இது ஒருபுறம் இருந்தாலும், தன்பால் ஈர்பாலர்கள் என மாற்றுப்பாலினத்தவர்களின் கடத்தல் விரங்கள் கேட்டால் நமக்கு தலையே சுற்றிவிடும். அவர்களின் கதை தனி.

இந்தியா
சரி சர்வதேச நிலமையை பார்த்துவிட்டோம். தற்போது இந்தியாவின் நிலையை காண்போம். மொபைல் பிரீமியர் லீக் (எம்பிஎல்) வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1,827 பெண்கள் கடத்தப்படுகின்றனர். இதில் சிறுமிகளும் அடங்கும். இந்த சிறுமிகளில் சிலர் 9 வயதுக்கும் கீழ் உள்ளவர்களாவார்கள். ஆனால் இந்த கடத்தல்களுக்கு எதிராக தற்போது அரசின் செயல்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு அம்மாநில காவல்துறை 'ஆப்ரேஷன் ஸ்மைல்' எனும் திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம், தொலைந்துபோனவர்களை தேட தனிக்குழுக்களையும் அமைத்தது. இக்குழுக்கள் சமூக வலைத்தளங்களின் உதவியுடன் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுவர். இந்த திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் மற்றும் பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. அதேபோல இந்த குழு நாடு முழுவதும் உள்ள என்ஜிஓ-களை தொடர்பு கொண்டு தொலைந்தவர்களை தேடுவார்கள். அதேபோல டெல்லியை பொறுத்த அளவில் டெல்லி எம்.ஐ.டியின் லிங்கன் ஆய்வகம் இந்த குற்றங்களை தடுக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. இதன் மூலம் ஆன்லைன் வர்த்தக பாலியல் விளம்பரங்களை தானாக பகுப்பாய்வு செய்து கடத்தலுக்கும் இந்த விளம்பரத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதாக என்று ஆய்வு செய்கிறது.

மேற்கு வங்காளத்தின் ஸ்வயங் சித்தா பிரச்சாரம்
வங்க மொழியில் ஸ்வயங் சித்தா என்றால் தன்னம்பிக்கை என்ற பொருள். கடந்த 2010-2016 ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த கடத்தல் சம்பவங்களில் சுமார் 25% மேற்கு வங்கத்தில்தான் நடைபெற்றது. எனவே இதை குறைக்கும் பொருட்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் காணாமல் போவோரை கண்டறிய முனைப்புடன் இயங்கி வருகிறது. ஒரு குழுவாக இந்த திட்டத்தில் இருப்பவர்கள் செயல்படுகின்றனர். இதில் காவல்துறை, மாணவர்கள், ஆசிரியர்கள், கிராமப் பஞ்சாயத்துகள், நிர்வாக அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஆட்கடத்தல் நடவடிக்கையை தடுக்கவும், அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்த திட்டம் மூலம் 2017ம் ஆண்டே கைமேல் பலன் கிடைத்தது. நாட்டின் ஒட்டுமொத்த ஆட்கடத்தல் வழங்குகளில் மேற்குவங்கத்தின் பங்கு 25%லிருந்து 16.1% ஆக குறைந்தது. எனவே மனிதர்களை சக மனிதர்கள் கடத்துவதற்கு எதிரான நாம் ஒரு உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம். இந்த தடுப்பு பணியில் ஈடுபடுவோர்களுக்கு உறுதுணையாக நிற்போம்.












Click it and Unblock the Notifications