கெஜ்ரிவாலின் ஐ போன், லேப்டாப் பாஸ்வேர்ட் தெரியாமல் தவிக்கும் ED.. ஆப்பிள் நிறுவனமும் கை விரித்தது
டெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆப்பிள் ஐபோன் மற்றும் லேப்டாப்பின் பாஸ்வேர்டை திறக்க அமலாக்கத்துறை ஆப்பிள் நிறுவனத்திடம் உதவி கோரியதாகவும், இதற்கு தங்களால் திறக்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் கைரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்றுடன் அமலாக்கத்துறை காவல் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலுக்கு வருகிற 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, சாக்லேட் மிட்டாய்கள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஹவாலா பணமாக பணம் கிடைத்ததாகவும், அதனை அவர்கள் கோவா சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியது.
மேலும், இதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆனால் கெஜ்ரிவால் செல்போன் மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொல்லை கூறவில்லை. இதனால் எங்களால் டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்ற முடியவில்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இதனால் கெஜ்ரிவாலின் செல்போன் மற்றும் மடிக்கணியை ஹேக் செய்து தகவல்களை எடுக்க உள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியிருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திடம் அமலாக்கத்துறை உதவி கோரியதாக கூறப்படுகிறது. அப்போது ஆப்பிள் நிறுவனம், உரிமையாளர் நினைத்தால் மட்டுமே இதனை திறக்க முடியும் என்றும் எங்களால் முடியாது என்றும் கை விரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு மதுபான கொள்கை முறைகேடு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக ஆம் ஆத்மி கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. புதிய மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது.
சட்டவிரோதப் பரிவர்த்தனை என நடைபெற்றது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கெஜ்ரிவாலை விசாரிக்க அமலாகக்த்துறை திட்டமிட்டது. இதற்காக அமலாக்கத்துறை பலமுறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது.
ஆனால், இந்த சம்மனை ஏற்று ஆஜராகாமல் கெஜ்ரிவால் புறக்கணித்து வந்தார். இந்த நிலையில், தான் கடந்த மாதம் 21 ஆம் தேதி கெஜ்ரிவால் வீட்டிற்கே சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்தனர். கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிந்த நிலையில், அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை காவலில் எடுக்க விரும்பவில்லை என்று அமலாகக்துறை கோரியதையடுத்து, வரும் 14 ஆம் தேதி வரை கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். திகார் சிறையில் உள்ள அறை எண் 2 ல் போலீசார் அடைத்தனர். கெஜ்ரிவால் முதல்வராக இருப்பதால் விதிகளின் படி அவருக்கு சில சலுகைகள் கிடைக்கும். அதன்படி, கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, பாட்டில் குடிநீர், தலையணை, சாக்லேட் மிட்டாய்கள் உள்ளிட்டவை வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதேபோல், கெஜ்ரிவால் தனது மனைவியை தினமும் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளி என்பதால், அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications