காஷ்மீரில் தீவிரவாதிகளால் ராணுவ வீரர் கடத்தல்? பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு விளக்கம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் ஒருவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக வெளியான செய்திக்கு பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பத்கம் மாவட்டத்தை சேரர்ந்தவர் முகமது யாசீன். ராணுவ வீரரான இவர் விடுமுறைக்காக தனது வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, முகமது யாசீனை சிலர் கடத்திச் சென்றதாக, அவரது குடும்பத்தினர், காவல்துறையிடம் புகார் அளித்ததாக நேற்று செய்தி வெளியானது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு நேற்று காஷ்மீர் மத்திய பிரிவு டிஐஜி, வி.கே.பிர்தி அளித்த பேட்டியில், "இரவு 8.45 மணியளவில், இரண்டு மூன்று ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள், முகமது யாசீன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கி முனையில், அவரை கடத்திச் சென்றுவிட்டனர்" என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ராணுவ வீரர் கடத்தப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் இன்று, விளக்கம் அளித்துள்ளது. முகமது யாசீன் பத்திரமாக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதனிடையே, காஷ்மீர் மாநிலம் கிஸ்துவாரிலுள்ள போலீஸ்காரர் வீட்டிலிருந்து ஏகே 47 துப்பாக்கி திருடப்பட்டுள்ளது. துணை கமிஷனரின் தனிப் பாதுகாவலராக உள்ள போலீஸ்காரரின் வீட்டிலிருந்து, துப்பாக்கி திருடிச் செல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தீவிரவாதிகள்தான் இதை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications