உயிருடன் எரிக்க முயற்சி? கெஜ்ரிவால் மீது திடீர் திரவ தாக்குதல்.. ஆம்ஆத்மிக்கு போலீஸ் தந்த விளக்கம்
டெல்லி: டெல்லியில் பாதயாத்திரை சென்றபோது முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஒருவர் திடீரென்று திரவத்தை ஊற்றினார். ஸ்பிரிட் ஊற்றி கெஜ்ரிவாலை கொல்ல முயற்சி நடந்ததாக ஆம்ஆத்மி குற்றம்சாட்டியுள்ள நிலையில் போலீஸ் முக்கிய விளக்கம் தந்துள்ளது.
டெல்லி முதல்வராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான இவர் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். புதிய மதுபான கொள்கை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக அதிஷி செயல்பட்டு வருகிறார். அடுத்த ஆண்டு டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கெஜ்ரிவால் தற்போது பாதயாத்திரை சென்று வருகிறார்.
அதன்படி நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள மாள்வியா நகரில் பாதயாத்திரை சென்றார். அவருடன் கிரேட்டர் கைலாஷ் எம்எல்ஏவும் மற்றும் அமைச்சரான சவுரவ் பரத்வாஜ் உள்பட பலர் சென்று கொண்டனர். கெஜ்ரிவால் இசட்+ பாதுகாப்பில் இருப்பதால் யாரும் நெருங்காத வகையில் அவர் செல்லும் பாதையில் அவரை சுற்றி கயிறை பயன்படுத்தி பாதுகாவலர்கள் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.
அப்போது திடீரென்று ஒருநபர் கெஜ்ரிவால் மீது திரவத்தை ஊற்றிவிட்டு ஓட முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அவரது பெயர் அசோக் ஷா என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் ஆம்ஆத்மி கட்சியின் சவுரவ் பரத்வாஜ் கூறுகையில், ‛‛அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் கொல்ல முயன்றார். அவரை உயிருடன் எரித்து கொல்வதற்கான முயற்சி நடந்துள்ளது. அந்த நபர் ஸ்பிரிட்டை கெஜ்ரிவால் மீது ஊற்றி தீவைக்க முயற்சி செய்துள்ளார்'' என்று குற்றம்சாட்டி உள்ளார்.
ஆனால் ஆம்ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். இதுபற்றி டெல்லி துணை போலீஸ் கமிஷனர் அங்கித் சவுகான் கூறுகையில், ‛‛பாதயாத்திரைக்கு அனுமதி பெறவில்லை. இருப்பினும் கூட்டம் கூடியதால் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மாலை 5.50 மணியளவில் கெஜ்ரிவால் மீது தண்ணீர் ஊற்ற முயற்சி செய்யப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பூ கொடுப்பது போல் தண்ணீர் ஊற்ற முயற்சி நடந்தது. அதனை போலீசார் தடுத்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின் பின்னணி பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications