"கெஜ்ரிவாலின் வலதுகரம்".. பாஜகவில் ஐக்கியமான ராகவ் சத்தா யார்? மொத்தமாக காலியாகும் ஆம்ஆத்மி
டெல்லி: ஆம்ஆத்மி கட்சியின் இளம் தலைவராக வலம் வரும் ராகவ் சத்தா திடீரென்று இன்று பாஜகவில் இணைந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் வலதுகரமாக அறியப்படும் அவர் இன்று 2 எம்பிக்களுடன் பாஜகவில் ஐக்கியமானார். அதுமட்டுமின்றி ஆம்ஆத்மி எம்பிக்களான ஹர்பஜன் சிங் உள்பட இன்னும் பலரை ஆம்ஆத்மியில் இருந்து பிரித்து பாஜகவில் இணைக்க அவர் திட்டமிட்டு வருவதாக கூறப்படும் நிலையில் ராகவ் சத்தா யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் பெரும் புயல் வீச தொடங்கி உள்ளது. டெல்லியில் தொடர்ந்து வெற்றி கொடி நாட்டிய ஆம்ஆத்மி கடந்த தேர்தலில் தோற்றது. தற்போது பஞ்சாப்பில் மட்டுமே ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.

மேலும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டவர்கள் டெல்லி புதிய மதுபான ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்தது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இப்படியான சூழலில் தான் தற்போது ஆம்ஆத்மி கட்சிக்கு பெரிய அடி விழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ராகவ் சத்தா இன்று அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருடன் ஆம்ஆத்மியின் சந்தீப் பதக், அசோக் மிட்டல் என்ற 2 எம்பிக்களும் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர்.
இதுபற்றி ராகவ் சத்தா கூறுகையில், ''ஆம்ஆத்மி கட்சி தேச நலனுக்காக உழைக்கவில்லை. தனிப்பட்ட ஆதாயங்களுக்காக உழைக்கிறது. சமீப காலமாக ஒரு சரியான மனிதன் தவறான கட்சியில் இருப்பதாக நான் உணர்ந்து வந்தேன். மக்களிடம் நெருக்கமாக இருக்க பாஜகவில் ஐக்கியமாகி இருக்கிறேன்'' என்றார். மேலும் இன்னும் சில எம்பிக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ராகவ் சத்தா, அரவிந்த் கெஜ்ரிவாலின் வலதுகரமாக செயல்பட்டு வந்தவர்.
ராகவ் சத்தா கடந்த 1988 ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு வயது 38. இவர் அடிப்படையில் சார்ட்டர்ட் அக்கவுண்ட்டன்ட் ஆவார். டெலாய்ட் மற்றும் கிராண்ட் தோர்ன்டன் நிறுவனங்களில் பணியாற்றி இருந்தார். ஆம்ஆத்மி கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கியது முதலே கட்சியில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். அப்போது அவருக்கு வெறும் 24 வயது தான். கடந்த 2012ல் டெல்லி லோக்பால் மசோதா வரைவு குழுவில் ராகவ் சதா இருந்தார். அதன்பிறகு ஏஏபி டிவி என்ற பெயரில் சேனலை தொடங்கினார்.
இளம் வயதிலேயே ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக மாறினார். 26 வயதில் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய பொருளாளராக கெஜ்ரிவால் நியமனம் செய்தார். கடந்த 2019 தெற்கு டெல்லி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2020ல் பஞ்சாப் மாநிலத்தின் ஆம்ஆத்மி கட்சியின் துணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். 2022ல் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றது.இந்த வெற்றிக்கு ராகவ் சதா முக்கிய பங்காற்றினார்.
அதன்பிறகு 2020ம் ஆண்டில் டெல்லி சட்டசபை தேர்தலில் களமிறங்கிய ராகவ் சத்தா வெற்றி வெற்றி பெற்றார். ராஜிந்தர் தொகுதியில் அவர் வாகை சூடினார். டெல்லி ஜல் வாரியத்தின் துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பிறகு 2022ம் ஆண்டில் ராகவ் சத்தா ஆம்ஆத்மி சார்பில் ராஜ்யசபா எம்பியானார். பஞ்சாப்பில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டர். பிறகு குஜராத் சட்டசபை தேர்தலுக்கான துணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் பஞ்சாப் ஆம்ஆத்மி முதல்வர் பகவந்த் மானின் ஆலோசகர் குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தார்.
அதுமட்டுமின்றி ஆம்ஆத்மியின் ராஜ்யசபா எம்பிக்களின் துணை தலைவராக இருந்த ராகவ் சத்தாவை அந்த பொறுப்பில் இருந்து ஆம்ஆத்மி கட்சி நீக்கியது. இதில் அவர் அதிருப்தியான நிலையில் தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மட்டுமின்றி தனக்கு நெருக்கமானவர்களை பாஜகவுக்கு அழைத்து சென்றுள்ளதால் இது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications