அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவி விலகல்.. அடுத்த டெல்லி முதல்வராகிறாரா மனைவி சுனிதா கெஜ்ரிவால்?
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்கிறார். இதனையடுத்து டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா? அப்படி முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில் அடுத்த டெல்லி முதல்வர் யார்? என்பது குறித்த விவாதம் களை கட்டியிருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. ஆனால் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. முதல்வர் அலுவலகத்துக்குச் செல்லவோ, அரசு கோப்புகளில் கையெழுத்திடவோ தடை விதித்தது உச்சநீதிமன்றம். இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

கெஜ்ரிவாலின் ராஜினாமா அறிவிப்பு: இதனையடுத்து டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியினரிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 2 நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறேன். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு முன்னதாக நவம்பரிலேயே மகாராஷ்டிரா சட்டசபையுடன் தேர்தல் நடத்தலாம். அப்படி தேர்தல் நடைபெறாத நிலையில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்தார்.
அடுத்த முதல்வர் யார்?: இதனையடுத்து டெல்லி அரசியல் களம் பெரும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தால் இயல்பாகவே ஆம் ஆத்மி மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாதான் முதல்வராகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் டெல்லி கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவும் முதல்வர் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாக கூறியிருந்தார். இதனால் முதல்வர் பதவிக்கான ரேஸில் மணீஷ் சிசோடியா இல்லை.
அதிஷி: டெல்லி தகவல்களின் படி, அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் முகமாக அறியப்பட்டவர் டெல்லி அமைச்சர் அதிஷி. சிறையில் கெஜ்ரிவால் இருந்த போது டெல்லி அரசு நிர்வாகத்தை நடத்திய அனுபவம் உண்டு. அப்போது பல்வேறு முக்கிய துறைகளையும் கவனித்தவர் அதிஷி. ஆகையால் அதிஷி முதல்வர் பதவிக்கான ரேஸில் முன்னணியில் இருக்கிறார்.
கோபால் ராய்: இதேபோல டெல்லி அரசியல் களத்தில் மாணவர் தலைவராய் அறிமுகமாக ஆம் ஆத்மி கட்சியின் கடைநிலை தொண்டர் வரை நெருக்கம் கொண்டவராக இருக்கும் கோபால் ராய் பெயரும் முதல்வர் பதவிக்கான ரேஸில் அடிபடுகிறது. தற்போது கெஜ்ரிவால் அரசில் அமைச்சராக இருக்கிறார். டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சரான கைலாஷ் கலோட் பெயரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளது.
சுனிதா கெஜ்ரிவால்: இவர்களைத் தவிர அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பெயர் அதிகமாகவே உச்சரிக்கப்படுகிறது. முன்னாள் வருவாய்த்துறை அதிகாரியான சுனிதா கெஜ்ரிவால், டெல்லி, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் ஆம் ஆத்மிக்காக லோக்சபா தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டவர். அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது நாள் தோறும் ஊடகங்களை சந்தித்தவர். டெல்லி, ராஞ்சியில் இந்தியா கூட்டணி கூட்டங்களில் ஆம் ஆத்மி சார்பாக பங்கேற்றவர்.. அரசியல் பின்புலம் இல்லாத போதும் அரசு நிர்வாகத்தை கையாளக் கூடியவர் என்பதால் சுனிதா கெஜ்ரிவால் பெயரும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications