5 மாநில சட்டசபை தேர்தல்கள்: பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் சோனியா ஆலோசனை
டெல்லி: உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் தொடர்பாக இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களுக்கான பணியில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைப்பதில் முனைப்பாக உள்ளது. உ.பி. தேர்தல் பணிகளுக்காக மத்திய அமைச்சர்களை பொறுப்பாளர்களாக பாஜக நியமித்துள்ளது.

பஞ்சாப் தொங்கு சட்டசபை
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். மேலும் பஞ்சாப் மாநில தேர்தலில் தொங்கு சட்டசபை உருவாகும் என்கின்றன கருத்து கணிப்புகள். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக மீதான அதிருப்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் இருக்கிறது என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டபுள் டிஜிட் இடங்கள் கிடைக்குமா?
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு அடுத்ததாக 4-வது இடத்தில்தான் காங்கிரஸ் உள்ளது. இந்த தேர்தலிலாவது டபுள் டிஜிட் இடங்களை எப்படியும் பெறுவது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் உ.பி. தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ள இருக்கிறது.

சோனியா ஆலோசனை
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டத்தை சோனியா காந்தி இன்று கூட்டினார். இந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர் சேர்க்கை, மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், 5 மாநில தேர்தல்களை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டணி ஆகியவை குறித்தும் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தினார்.

மெகா கூட்டணி
தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கருத்தாக இருக்கிறது. ஆனாலும் உ.பி. உள்ளிட்ட மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள், காங்கிரஸை ஒதுக்கிதான் வைக்கின்றன. இது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்த சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார் என்கின்றன காங். வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications