தேர்தல் மாநிலங்களில் தொடர்ந்து குறையும் கொரோனா.! பிரசாரங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், பிரசார கட்டுப்பாடுகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் ஓமிக்ரான் கொரோனா காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டது. அப்போது 5 மாநில தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
அதன் பின்னர் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், அதற்கேற்ப பிரசாரத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அனுமதி
இன்று 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலையை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ள எண்ணிக்கையில் பாத யாத்திரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகளிடம் உரிய முன் அனுமதி பெற்று பாதயாத்திரைகள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள்
முன்பு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிரசாரம் செய்யத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், இனி மைதானங்களில் நடைபெறும் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் உள்ள கொரோனா பரவல் நிலைமையைத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து இந்த தளர்வுகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனுடன் தேர்தல் ஆணையம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாகவும் நாட்டில் ஆக்டிவ் கேஸ்களும் குறைந்து வருவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் மாநிலங்கள்
தேர்தல் அல்லாத மாநிலங்களில் இருந்து தான் அதிகபட்ச கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளது. நாட்டில் பதிவான ஒட்டுமொத்த கொரோனா கேஸ்களில் வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் குறைந்த அளவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 21இல் 3.47 லட்சமாக இருந்த தினசரி கேஸ்கள், இன்று (பிப்ரவரி 12இல்) 50,000 ஆகக் குறைந்துள்ளது.. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில், கடந்த ஜனவரி 22இல் 32,000 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்று (பிப்ரவரி 12) சுமார் 3,000 ஆகக் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications