அமைச்சர் பதவியால் செந்தில் பாலாஜிக்கு “சிக்கல்”.. ஜாமீனை ரத்து பண்ணுங்க.. சுப்ரீம் கோர்ட்டில் வாதம்!
டெல்லி: செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை எனவே சாட்சியை கலைக்கமாட்டார் என்று தான் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராகிவிட்டார். எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாரர்கள் தரப்பு வாதம் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு கடந்த 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். சிறையில் இருந்து 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்: உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜிக்கு வழங்கிய நிபந்தனை ஜாமீனில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், மாதத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்திருந்தது.
அமைச்சரான செந்தில் பாலாஜி: ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி உள்ளார். செந்தில் பாலாஜி சிறை செல்வதற்கு முன்பு வகித்து வந்த அதே இலாகாக்களுக்கு மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார். செந்தில் பாலாஜி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக நேற்று பதவிப் பிரமாணம் ஏற்று, தலைமைச் செயலகம் சென்று கோப்புகளில் கையெழுத்து இட்டு முறையாகப் பொறுப்புகளை ஏற்றார்.

அமைச்சரான பிறகு முதன்முறையாக கையெழுத்திட இன்று காலை 10:45 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். தனது சொந்த வாகனத்தில் எவ்வித பாதுகாப்பும் இன்றி தனியாக வந்து உச்ச நீதிமன்ற நிபந்தனைப்படி கையெழுத்திட்டு விட்டுச் சென்றார்.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை ஓராண்டுக்குள் முடிக்க உத்தரவிடக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் முக்கிய வாதம் ஒன்றை முன்வைத்தார். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை எனவே சாட்சியை கலைக்கமாட்டார் என்று தான் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராகிவிட்டார். எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரினார்.
செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு சிக்கல்: அதற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஓகா, அப்படி என்றால் ஜாமீனை மறு பரிசீலனை செய்வதற்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்யுங்கள் எனத் தெரிவித்தார். இதனால், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்படும் எனக் கருதப்படுகிறது. 15 மாதங்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, அவர் அமைச்சராகி உள்ள நிலையில், இப்போது அமைச்சர் பதவியை ஏற்றதாலேயே அவரது ஜாமீனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அமைச்சர்கள் மீதான வழக்கு: மேலும், செந்தில் பாலாஜி வழக்கை பிரத்யேகமாக விசாரிக்கும் சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் எஸ் குரு கிருஷ்ணகுமார் கோரினார். அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே, செந்தில் பாலாஜியை மட்டும் ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? மற்ற அமைச்சர்களும் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி ஓகா, இதைப் பற்றி அரசு கவலைப்படக் கூடாது. இந்த வழக்குக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று அரசு கூற வேண்டும் என்றார். அதற்கு அரசு வழக்கறிஞர் நபாடே, அதில் சிரமம் ஒன்றும் இல்லை. மற்ற அமைச்சர்கள் மகிழ்வார்கள் எனத் தெரிவித்தார்.
சென்னை ஐகோர்ட்டுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு: இதையடுத்து நீதிபதி ஓகா, "அமைச்சர்களுக்கு எதிராக எத்தனை வழக்குகள் உள்ளன என்பதை அடுத்த தேதியில் சுட்டிக்காட்டுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். அமைச்சர்கள் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை சொல்லுங்கள். இதேபோன்ற உத்தரவை பிறப்பிக்கலாம்." எனத் தெரிவித்தார்.
மேலும், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பணிச் சுமை அதிகமாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா? இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி தொடர்புடைய இந்த வழக்கு விசாரணையை விரைவாக கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார் நீதிபதி ஓகா.












Click it and Unblock the Notifications