எல்லையில் தோண்டப்படும் பதுங்கு குழிகள்.. இந்தியாவுடன் போரிட தயாரான வங்கதேசம்? உளவுத்துறை வார்னிங்
டெல்லி: வங்கதேசம் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறது. இருநாடுகள் இடையேயான உறவு எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாகி உள்ளது. இந்நிலையில் தான் எல்லையில் வங்கதேசம் பதுங்குகுழிகளை தோண்டி வருவதாக உளவுத்துறை அறிக்கை வழங்கி உள்ளதால் அந்த நாடு நம் நாட்டுடன் ரகசியமாக போருக்கு தயாராகி வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் எல்லையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது.
நமது ராணுவம் தான் வங்கதேசம் என்ற நாட்டையே உருவாக்கியது. பாகிஸ்தானின் ஒருபகுதியாக கிழக்கு பாகிஸ்தானாக அறியப்பட்ட பகுதி தான் தற்போது வங்கதேசமாக உள்ளது. தனிநாடு கோரி அந்த பகுதி மக்கள் போராடியபோது பாகிஸ்தான் ராணுவம் அவர்களை வெளுத்து வாங்கியது.

அப்போது நம் நாட்டின் ராணுவம் தான் சப்போர்ட்டுக்கு சென்றது. நம் நாட்டு ராணுவ வீரர்களிடம், பாகிஸ்தான் ராணுவம் அடிபணிந்து சரணடைந்தது. அதன்பிறகே வங்கதேசம் என்ற நாடு 1971ம் ஆண்டு உருவானது. இதனால் இருநாட்டு உறவு என்பது தொடக்கம் முதலே நன்றாக இருந்தது. அவ்வப்போது மட்டும் சிறுசிறு பிரச்சனை என்பது இருந்தது.
ஆனால் வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா வந்ததில் இருந்து பிரச்சனை எதுவும் வரவில்லை. அவர் நம்முடன் நெருக்கம் காட்டினார். ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அந்த நாட்டில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இதில் தலைமை ஆலோசகராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் உள்ளார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் அவர் நம் நாட்டை தேவையின்றி சீண்டி வருகிறார். இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல் என்பது வலுத்துள்ளது. இந்நிலையில் தான் வங்கதேசம் - இந்தியா இடையேயான எல்லை பகுதியில் இருக்கும் சூழல் பற்றி உளவுத்துறை சார்பில் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதில் நம் நாட்டின் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள எல்லையில் வங்கதேசம் தனக்கு சொந்தமான இடத்தில் பல பகுதிகளில் மண்களை அகற்றி உள்ளது. இது தாக்குதலின்போது தற்காத்து கொள்வதற்கான பதுங்கு குழியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதுதொடர்பான போட்டோ ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் நம் நாட்டுடன் வங்கதேசத்தின் எல்லை காவல் படையினர் மோதலுக்கு தயாராகின்றனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து தான் தற்போது எல்லையில் நம் நாட்டு வீரர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக நம் நாட்டுக்கும், வங்கதேசம் இடையேயான எல்லையில் வேலிகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சமீபகாலமாக வங்கதேசத்தின் செயல்பாடு என்பது நம் நாட்டுக்கு எதிராகவே உள்ளது. குறிப்பாக எல்லையில் மோதலை தொடங்கும் வகையில் தான் அந்த செயல்பாடுகள் பார்க்கப்படுகிறது.
அதாவது வங்கதேசம் நம் நாட்டுடன் தான் அதிகமாக எல்லையை பகிர்ந்து வருகிறது. இருநாடுகள் இடையே 4,096 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லைகள் உள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்துடன் 2,217 கிலோமீட்டர் எல்லையை வங்கதேசம் பகிர்ந்துள்ளது. இதுதவிர வடகிழக்கு மாநிலங்களுடன் எல்லைகளை வங்கதேசம் பகிர்ந்து வருகிறது. இதில் வடகிழக்கு மாநிலங்களை நம் நாட்டுடன் மேற்குவங்கம் வழியாக இணைக்கும் சிக்கன் நெக் எனும் கோழிக்கழுத்து பகுதியில் சமீபத்தில் வங்கதேசம் துருக்கி நாட்டின் நவீன ட்ரோன்களை பறக்கவிட்டு கண்காணிக்க தொடங்கியது. இதற்கு நம் நாடும் ட்ரோன்களை பறக்கவிட்டு பதிலடி கொடுத்தது.
அதேபோல் சமீபத்தில் வங்கதேசத்தின் சிட்டகாங்கில் ராணுவம், விமானப்படை, கடற்படை என்று முப்படைகளும் போர் பயிற்சியை தொடங்கின. இதில் டாங்கிகள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது போதாது என்று பிப்ரவரியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம், வங்கதேசத்தில் வைத்து அந்த நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நம்முடன் மோதலை செய்யும் பாகிஸ்தானிடம் இருந்து அப்தாலி எஸ்ஆர்பிஎம் ஷார்ட் ரேஞ்ச் பாலிஸ்ட்டிக் ஏவுகணையை வாங்கவும், துருக்கியிடம் இருந்து துல்பர் லைட் வகையை சேர்ந்த நவீன டேங்குகளை வாங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது.
இது எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கதேசம் - இந்தியா இடையேயான எல்லையான மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள சுக்தேவ்பூர் கிராமத்தில் வேலி அமைக்கும் பணியில் நம் நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.இதற்கு வங்கதேச நாட்டின் பிஜிபி எனும் எல்லை காவல் படையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் சூழல் உருவான நிலையில் நம் நாட்டு எல்லையோர மக்கள் குவிந்ததால் வங்கதேச ராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர். இதுபோன்ற காரணங்கள் மற்றும் உளவுத்துறை அறிக்கை உள்ளிட்டவற்றால் வங்கதேசம் உடனான எல்லையில் நம் நாடு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications