ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா
டெல்லி: குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து வெறும் ரூ.10 ஆயிரத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அது அவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இப்போது அவருக்கு ரூ. 3 லட்ச ரூபாய் கிடைத்தாலும் கூட இதனால் அவர் ஹேப்பியாக இல்லையாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நமது நாட்டில் வங்கிகளைப் பொதுமக்கள் அணுகுவதும் பயன்படுத்துவதும் ஈஸியாகவே இருக்கிறது என்றாலும் சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத சிக்கலைச் சந்திக்க நேரிடலாம். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஒருவர் ஏடிஎம்மில் இருந்து 10,000 ரூபாய் எடுக்க முயன்றுள்ளார். சாதாரணமாக வங்கிக்குப் போய் பணம் எடுக்க முயன்ற இந்தச் சம்பவம் அவர் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

10,000 ரூபாய்
வெறும் 10,000 ரூபாய் இடுக்கு போன அவருக்கு நடந்த சம்பவம், 9 ஆண்டுகளுக்கும் மேலான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. எண்ணற்ற புகார்கள் மற்றும் மின்னஞ்சல்களுக்குப் பிறகு இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளது. இப்போது வங்கி அதன் அசல் தொகையைவிடக் கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகமாகச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் சமீப காலங்களில் நடந்த மிகப் பெரிய பணப் பரிமாற்றப் பிழைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இவை அனைத்துமே கடந்த 2017, பிப்ரவரி 18ம் தேதி தொடங்கியுள்ளது. அன்றைய தினம் சூரத்தின் உத்தனா பகுதியில் உள்ள ஒரு வாடிக்கையாளர் அருகே உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் ஒன்றில் 10,000 ரூபாய் எடுக்க முயன்றுள்ளார். அவர் வழக்கம் போல தனது டெபிட் கார்ட்டை பயன்படுத்தி, சீக்ரெட் பின் நம்பரை போட்டு பணத்தை எடுக்க முயன்றுள்ளார். இருப்பினும், ஏடிஎம் மெஷினில் இருந்து பணம் வரவில்லை.. ரசீதும் வரவில்லை. ஆனால், சில நொடிகளிலேயே, அவரது கணக்கிலிருந்து 10,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. இது அவரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பெரும் போராட்டம்
கையில் ஒரு ரூபாய் கூட வரல.. எப்படி ரூ.10,000 வந்ததாக மெசேஜ் வரும் எனப் பார்த்து அவர் அதிர்ந்து போனார். இதையடுத்து வாடிக்கையாளர் பிப்ரவரி 21ம் தேதி அவர் பாங்க் ஆஃப் பரோடாவின் எழுத்துப்பூர்வ புகார் அளித்தார். மார்ச் முதல் மே 2017 வரை, அவர் பலமுறை மெயில் மூலம் வங்கியைத் தொடர்பு கொண்டார். அத்துடன் ரிசர்வ் வங்கி மற்றும் பிற அதிகாரிகளிடமும் முறையிட்டார். தனது கைக்குப் பணம் வரவில்லை என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளைக் காட்டினார். மேலும், அவர் பயன்படுத்தியது எஸ்பிஐ ஏடிஎம் என்பதால் அங்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார்.
9 ஆண்டுகள்
ஆனால், எந்தத் தரப்பிலிருந்தும் அவருக்குத் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, 2017 டிசம்பர் 20ம் தேதி அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. கடந்த 9 ஆண்டுகளாக இவரது கேஸ் அங்கு நடந்து வந்தது. விசாரணையின் போது, பாங்க் ஆஃப் பரோடா சார்பில் ஆஜரான அதிகாரிகள், வாடிக்கையாளர் பயன்படுத்திய ஏடிஎம் எஸ்.பி.ஐ வங்கிக்குச் சொந்தமானது என்றும் தங்கள் ரெக்கார்டுகளில் பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்ததாகவே உள்ளதாகத் தெரிவித்தனர். இதனால், தங்கள் வங்கிக்கு இதில் பொறுப்பில்லை எனக் கூறியது.
எனினும், நுகர்வோர் ஆணையம் இந்த வாதத்தை ஏற்கத் திட்டவட்டமாக மறுத்தது. பரிவர்த்தனை தொடர்பான உறுதியான ஆதாரங்களை வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ரிசர்வ் வங்கி விதிகளின்படி, இதுபோல பிழைகள் நடந்தால் ஐந்து நாட்களுக்குள் பணத்தைத் திரும்பச் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அதை வங்கி செய்யத் தவறிவிட்டது என்றும் ஆணையம் சுட்டிக் காட்டியது.
இழப்பீடு
வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம் தனது தீர்ப்பில் பாங்க் ஆஃப் பரோடாவுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன்படி, அசல் தொகையான 10,000 ரூபாயை, ஆண்டுக்கு 9% வட்டியுடன் சேர்த்து வாடிக்கையாளருக்குத் திரும்பத் தர வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், பணத்தைத் திரும்பச் செலுத்தத் தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் இழப்பீடு வழங்கவும் பணிக்கப்பட்டது.
அதன்படி பார்த்தோம் என்றால் மொத்தம் தாமதமான நாட்கள் 3,288 நாட்களைத் தாண்டிவிட்டது. எனவே, இழப்பீட்டுத் தொகை 3,28,800 ரூபாயாக உயர்ந்துள்ளது.. மேலும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 3,000 ரூபாயும், சட்டச் செலவுகளுக்காக 2,000 ரூபாயும் செலுத்தவும் வங்கிக்கு ஆணையம் உத்தரவிட்டது. இது வாடிக்கையாளருக்குச் சாதகமான தீர்ப்பு தான் என்றாலும் 9 ஆண்டு தாமதம் அவரை சோகத்திலேயே ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications