புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தோல்வி.. இன்றும் நாளையும் வங்கிகள் வேலைநிறுத்தம்
Recommended Video
டெல்லி: புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தக் கோரி இன்றும் (ஜன.31), நாளையும் (பிப்ரவரி 1) ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி வங்கிகள் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கேற்பு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக வரும் 31-ஆம் தேதி போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான சமரச பேச்சு வார்த்தைக்கு வங்கி ஊழியர் சங்கத்தினர் அழைக்கப்பட்டனர். இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் ஆணைய அலுவலகத்தில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் திட்டமிட்டப்படி போராட்டம் நடத்த ஆயத்தமாவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு கிடைக்கிறது.
கடந்த 2017-இல் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் இது வரை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை 2017-ஆம் ஆண்டு முதலே தொடங்கியது.
இன்றைய விலைவாசி, வேலை பளு ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதலாக ஊதியம் வழங்க வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி ஜனவரி 31-ஆம் தேதி, பிப்ரவரி 1-ஆம் தேதி, மார்ச் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை மற்றும் ஏப்ரல் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியானது.