5,000 கிலோ கிச்சடி தயாரித்த பாஜக.. எதுக்குன்னு தெரியணுமா?? அப்ப.. இதை படியுங்க
டெல்லி:பாஜகவின் தலித் மக்கள் பிரிவு சார்பாக நடத்தப்படும் 'பீம் மகாசங்கம்' பேரணிக்காக 5000 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தலித் மக்கள் பிரிவு சார்பில் 'பீம் மகாசங்கம் விஜய் சன்கால்ப்' என்ற பெயரில் பேரணி ஒன்று நடைபெற இருக்கிறது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணிக்கு பாஜக தலைவர் அமித்ஷா தலைமையேற்கிறார்.
பேரணியில், சாதி சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாஜக ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது, தலித் மக்களின் வீடுகளிலிருந்து பெறப்பட்ட அரிசி மற்றும் பயறுகளைக் கொண்டு 5000 கிலோ கிச்சடி தயார் செய்யப்பட்டு அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற உலக உணவு திருவிழாவில், மத்திய உணவு அமைச்சகம் சார்பில் 918 கிலோ கிச்சடி சமைக்கப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை 'பீம் மகாசங்கம்' பேரணி நடத்துவதன் மூலம் பாஜக கட்சி முறியடித்துள்ளது.
பொதுவாக, பாஜக அரசு சமூகத்தில், தலித் மக்களை மேம்படுத்துவதற்கான போதுமான முயற்சிகளை கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதுபோன்ற தருணங்களில் கிச்சடி பேரணி அதை புறம்தள்ளி, மக்களின் மனங்களை மாற்றும் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.