பீமா கொரோகான் வழக்கில் வரவர ராவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 4 ஆண்டுகள் கழித்து விடுதலை
டெல்லி: பீமா கொரேகான் வழக்கில் கடந்த 2018ல் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான வரவர ராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பீமா கொரேகான் வழக்கில் கடந்த 2018ல் மனித உரிமை செயல்பாட்டாளர் சுதா பரத்வாஜ், சிவில் உரிமைகள் செயல்பாட்டாளர் கவுதம் நவ்லங்கா, சுதிரா தவாலேவுக்காக வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் உரிமைப் போராளி அருண் பெரைரா, எழுத்தாளரும் உரிமை செயல்பாட்டாளருமான வெர்னான் கோன்சால்வ், சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான வரவர ராவ் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் சிலர் மவோயிஸ்ட் அனுதாபிகளாக உள்ளதாகவும், பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வரவர ராவுக்கு மருத்துவ காரணங்கள் அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. தற்போது இவருடன் ஒன்பது செயற்பாட்டாளர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் மீதான ஜாமீன் மனுக்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு நீதிமன்றங்களில் வழங்கப்படாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளன. மேலும் வழக்கின் விசாரணைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வரலாறு
மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள 'கோரேகான் பீமா' ஊரில் 1818ல் மராத்திய பேஷ்வா படைகளுக்கும் - கிழக்கிந்தியக் கம்பெனி படைகளுக்கும் இடையில் போர் நடைபெற்றது. போரில் கிழக்கிந்தியக் கம்பெனிப் படையில் படைவீரர்களாக இருந்த 49 தலித்துகள் மரணமடைந்தனர். இதில் கம்பெனி வெற்றிப் பெற்றது. போரில் கொல்லப்பட்ட 49 தலித்துகளின் பெயரைக் கொண்ட நினைவுத்தூண் ஒன்றை கம்பெனி ஆட்சியினர் நிறுவினர். ஆண்டு தோறும் தலித் மக்கள் இந்நினைவிடத்தில் கூடி, போரில் இறந்தவர்களுக்கு வழிபடு விழாவை நடத்திவருகின்றனர். இது இருநூறு ஆண்டுகாளாக நடைபெறுகிறது.
கலவரம்
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 1 அன்று, இந்த வெற்றித் தூண் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விழாவை நடத்தினர். அப்போது பெரிய அளவில் வன்முறை வெடித்தது. கலவரம் மற்றும் கல்வீச்சில் பல வாகனங்கள் உடைக்கப்பட்டன. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வன்முறை தொடர்பாக சமூகப் போராளிகள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 16 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் மற்றும் வேறு சிலரை காவல் துறையினரும், தேசியப் புலனாய்வு ஏஜென்சியும் கைது செய்தது.
குற்றச்சாட்டு
இந்த வன்முறையின் தொடக்கத்தில் வன்முறையை தூண்டியதாக இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளான சம்பாஜி பிடே மற்றும் மிலிந்த் எக்போடே மீது வழக்கு தொடரப்பட்டது. மிலிந்த் எக்போடே கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சம்பாஜு பிடே இன்னும் தலைமறைவாக உள்ளார். இதனையடுத்துதான் மேற்குறிப்பிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறை சோதனை மேற்கொண்டதில், ராஜீவ் காந்தி கொலைக்கு திட்டமிட்டதைப்போல பிரதமர் மோடியை கொலை செய்யவும் திட்டம் தீட்டியிருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
இவர்கள் மீது மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் விஷ்ரம்பக் காவல் நிலையத்தில் வரவர வாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 153(A), 505(1), (B), 117, 120(B) பிரிவுகளின் கீழும், சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டத்தின் படி 13, 16, 17, 18(B), 20, 38, 39, 40 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்து பிபிசி ஊடகத்திற்கு பேட்டியளித்த வரவர ராவ், சம்பாஜி பிடே மற்றும் மிலிந்த் எக்போடே மீதான குற்றசாட்டுகளை மறைப்பதற்காக காவல்துறை இதுபோன்ற போலி குற்றச்சாட்டுகளை எங்கள் மீது பின்னியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜாமீன்
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பின்னர் வரவர ராவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இது குறித்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவில், "விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியின்றி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் அதிகார வரம்பிலிருந்து ராவ் வெளியேறக் கூடாது, அவர் தனது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது மற்றும் அவர் எந்த சாட்சியுடனும் தொடர்பு கொள்ளக்கூடாது" எனக்கூறியுள்ளது. அதேபோல "ராவ் தனது விருப்பப்படி மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு உரிமையுடையவர். அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து NIA க்கு தெரிவிக்க வேண்டும்" எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "இந்த ஜாமீன் முழுக்க முக்க மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே. இந்த உத்தரவு மற்ற குற்றவாளிகளின் வழக்கை பாதிக்காது" என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.