ஆஹா பெரிய ட்விஸ்ட்! பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்? மோடியுடன் திடீர் மீட்டிங்
டெல்லி: நாளை லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், பீகார் அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்திற்குத் தயாராவதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசிக் கட்ட தேர்தல் நடைபெற்றது

எக்ஸிட் போல்: வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே சனிக்கிழமை இரவு முதலே பல்வேறு மாநிலங்களிலும் லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் சர்வேக்கள் வெளியானது. அதில் பெரும்பாலான சர்வேக்களில் பாஜக தலைமையிலான என்டிஏ அரசு ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது
பீகார் அரசியல் களம்: இது ஒரு பக்கம் இருக்கப் பீகார் மாநிலத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எக்ஸிட் போல் முடிவுகள் வெளியான உடனேயே பீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லி சென்றுள்ளார். டெல்லி கிளம்பும் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், லோக்சபா தேர்தலில் நிச்சயம் பாஜகவின் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் எனக் கூறியிருந்தார்.
டெல்லியில் நிதிஷ்குமார் பாஜக தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.. மேலும், இன்று மாலை அவர் அமித்ஷாவையும் சந்திக்கிறார்.. பாஜக பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைக்கும் எனத் தகவல் வெளியான நிலையில், இந்த மீட்டிங் நடப்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், லோக்சபா தேர்தல் வெளியான உடன் பீகாரில் பெரிய அரசியல் மாற்றம் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராஜினாமா செய்கிறாரா: அதாவது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.. நிதிஷ்குமார் அதற்குப் பதிலாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பார் என்று கூறப்படுகிறது. பீகார் மாநிலத்திற்கு புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார். புதிய முதல்வர் பாஜகவில் இருந்தா அல்லது ஜேடியு கட்சியில் இருந்தா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், பீகார் சட்டசபையில் பாஜகவுக்கே அதிக சீட் இருப்பதால் அக்கட்சியில் இருந்தே முதல்வராக ஒருவர் நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.
243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் பாஜக தான் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. மொத்தம் 85 சீட்கள் பாஜக வசம் இருக்கிறது. அதேநேரம் நிதிஷ்குமாரின் ஜேடியுவிடம் 44 சீட் மட்டுமே இருக்கிறது. இருப்பினும் நிதிஷ் குமார் தான் முதல்வராக இருந்து வந்த நிலையில், பீகார் அரசியல் மிகப் பெரிய மாற்றத்தைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி: நிதிஷ்குமாரை பொறுத்தவரை அவர் பல ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் தான் இருந்தார். இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திடீரென கூட்டணியை முறித்துக் கொண்ட அவர், பீகாரில் ஆர்ஜேடி மெகா கூட்டணியில் இணைந்தார். ஆர்ஜேடி- ஜேடியு- காங்கிரஸ் இணைந்து ஆட்சியை அமைத்த நிலையிலும் நிதிஷ்குமாரே முதல்வராகத் தொடர்ந்தார். அப்போது அவர் எடுத்த முன்னெடுப்பிலேயே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவானது.
இருப்பினும், லோக்சபா தேர்தலுக்கு இரண்டு மாதங்களே இருந்த போது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டு அவர் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறினார். மீண்டும் அவர் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். அப்போதும் அவர் தனது முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார்.
இந்தச் சூழலில் தான் அவர் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலுக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஏற்கனவே 1999- 2004 காலகட்டத்திலும் வாஜ்பாய் அமைச்சரவையில், விவசாய துறை மற்றும் ரயில்வே துறைகளின் அமைச்சராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications