பீகாரில் திரிசங்கு ஆட்டத்தில் பாஜக... லோக் ஜனசக்தியில் இணைந்த பாஜக தலைவர்கள்... என்னதான் நடக்கிறது!!
டெல்லி: பீகார் மாநில தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனநாயக கூட்டணி, லோக் ஜனசக்தி கட்சிகளுக்கு இடையே திரிசங்கு அரசியல் ஆட்டம் துவங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என்பது சோதனை களமாக அமைந்துள்ளது.
ஐக்கிய ஜனநாயக கட்சியுடன் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடியாது என்று லோக் ஜனசக்தி கடந்த வாரம் அறிவித்து இருந்தது. தற்போது முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதற்காக பாஜக செய்து இருக்கும் தேர்தல் யுக்தி இது என்று கூறப்படுகிறது.

இது முன்பே கூறப்பட்டு வந்தாலும், தற்போது, ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக மூத்த செல்வாக்குமிக்க பாஜக தலைவர்களை நிறுத்த இருப்பதாக லோக் ஜனசக்தி அறிவித்து இருப்பதன் மூலம் உறுதியாகிறது. இந்தப் போட்டி வேட்பாளர்கள் அனைவரும் லோக் ஜனசக்தி சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்பதும் கூடுதல் செய்தியாக உள்ளது.
ஆர்எஸ்எஸ்ஸூம் தற்போது லோக் ஜன்சக்திக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதையெல்லாம் உறுதிபடுத்தும் வகையில் சமீபத்தில் பீகார் பாஜக துணைத் தலைவராக இருக்கும் ராஜேந்திர சிங் லோக் ஜனசக்தியில் சேர்ந்து இருந்தார். இவர் இதற்கு முன்பு ஜார்கண்ட் முன்னாள் பொதுச்செயலாளராகவும், வாரணாசி பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். தினரா தொகுதியில் இருந்து ராஜேந்திர சிங் போட்டியிடுவார் என்று தெரிய வந்துள்ளது.
இவர் துவக்கத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவராக இருந்து வந்தார். 2015ஆம் ஆண்டு தேர்தலில் ஜார்கண்ட் பொறுப்பாளராக இருந்து வந்தார். 2015ல் பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இருந்தால், இவரும் முதல்வர் பதவிக்கு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
இவரையடுத்து ராமேஷ்வர் சவ்ரசியா பாஜகவில் இருந்து விலகி லோக் ஜனசக்தியில் இணைந்து நோகா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதியில் 2000 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். இவரையடுத்து ஐந்து முறை சசரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஜவஹர் பிரசாத்தும் லோக் ஜனசக்தியில் இணைந்துள்ளார். இவரும் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர்.
இவரைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து டாக்டர் உஷா வித்யார்த்தியும் லோக் ஜனசக்தி கட்சியில் சேர்ந்துள்ளார். இந்தக் கட்சியில் இணைந்த பின்னர் பேட்டியளித்து இருந்த உஷா, ''பாஜகவில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மக்களுக்கு நான் பணியாற்ற வேண்டும். எனக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதிக முறை ஒரே தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்கள் ஏன் லோக் ஜனசக்தியில் இணைய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவர்கள் பாஜக தலைமை ஆசீர்வாதம் இல்லாமல் லோக் ஜனசக்தியில் இணைய முடியாது என்ற பேச்சசு அடிபடுகிறது. இந்தப் போட்டியில் லோக் ஜன்சசக்தி கட்சி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் நிதிஷ் குமாரின் செல்வாக்கு தானாக குறையும். பாஜகவின் கை மாநிலத்தில் ஓங்கும் என்பது பாஜக திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications