ஆறு மாநிலங்களில்... கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல்... மத்திய அரசு பகீர் தகவல்
டெல்லி: இந்தியாவில் இதுவரை ஆறு மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாத தொடக்கத்தில் காகங்கள் திடீரென்று கொத்து கொத்தாக உயிரிழந்தன. அப்போது உயிரிழந்த காகங்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது, அவை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் பறவைக் காய்ச்சல் மெல்ல பரவியது. இந்நிலையில், இதுவரை மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர். ஹிமச்சல பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் இரு இடங்களிலுள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ள வல்லுநர் குழு விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநிலமும் பறவை காய்ச்சல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து வருவதாகவும் தற்போது இருக்கும் நிலைமைக்கு ஏற்ற வகையில் பறவைக் காய்ச்சலைக் கட்டப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. திடீரென்று பறவைகள் உயிரிழக்கும்பட்சத்தில் அவற்றின் மாதிரிகளை மாநில அரசுகள் உடனடியாக சோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பறவைக் காய்ச்சல் குறித்துப் பரவும் போலி செய்திகளைக் கட்டுப்படுத்தவும், இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.