‘வினேஷ் போகத் குறித்து வாய் திறக்கக் கூடாது’.. பிரஜ் பூஷணுக்கு பாஜக ஸ்ட்ரிக்ட் ஆர்டர்
டெல்லி: மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதற்கு பாஜகவின் பிரிஜ் பூஷண் சரண் சிங் அவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், மல்யுத்த வீரர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என்று பிரிஜ் பூஷணுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
ஹரியானா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது. உடல் எடை அதிகரித்ததால், அவர் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ஒட்டு மொத்த நாடும் அதிருப்தியும், சோகத்தையும் தெரிவித்து வினேஷுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் பாஜக ஆதரவாளர்கள் மட்டும் அவரை குறை சொல்வதிலேயே குறியாக இருந்தனர்.

பாஜக மூத்தத் தலைவரும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமாக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமை புகார் வைத்தனர். இதில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்தாண்டு மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தேசியளவில் கவனம் ஈர்க்கப்பட்ட இந்தப் போராட்டத்தை மனதில் வைத்து, பாஜகவினர் வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை அப்போது முதலே விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் மாதம் 5ம் தேதி ஹரியானா மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தின் நட்சத்திர மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். வினேஷ் போகத், ஜூலானா சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவிக்க தொடங்கியுள்ளது.
முக்கியமாக பிரிஜ் பூஷண் சரண் சிங், "மல்யுத்த வீரர்களின் முதல் நாள் போராட்டத்தின்போதே, இதன் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று நான் சொல்லியிருந்தேன். அது ஒரு நாடகம். அதை பின்னால் இருந்து காங்கிரஸ் இயக்கியுள்ளது. ஒரு மல்யுத்த வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனை செய்ய முடியுமா என்று வினேஷ் போகத்தை கேட்க விரும்புகிறேன்.. ஏமாற்றி தான் அங்கு சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்கான வாய்ப்பை தட்டிப் பறித்து சென்றீர்கள். அதற்கான தண்டனையும் கடவுள் உங்களுக்கு வழங்கிவிட்டார்." என்று கூறியிருந்தார்.
இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு தரப்பில் இருந்து பிரஜ் பூஷண் சரண் சிங்குக்கு கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று என்ற பிரஜ் பூஷணுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"அரசியலில் இறங்கினாலும் பிரஜ் பூஷணுக்கு எதிரான சட்டப்போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்." என்று வினேஷ் மற்றும் பஜ்ரங் கூறியிருந்தனர். ஹரியானா மாநிலத்தில் ஏற்கனவே மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு பரவலாக ஆதரவு உள்ளது. இதனால் அது குறித்து கருத்து தெரிவித்து, அது தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடாது என்று நினைக்கின்றனர்.
மேலும் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத்தின் போராட்டத்துக்கும் ஆதரவு நன்றாக உள்ளது. அதனால் அவர்களைப் பற்றி வாய் திறக்க வேண்டாம் என்று பாஜக தேசிய தலைவர் நட்டாவே, பிரஜ் பூஷணிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications