ஆந்திரா பாஜக தலைவராக என்டிஆர் மகள் மாஜி மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி அதிரடி நியமனம்-பரபரக்கும் களம்!
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் மாநிலங்களில் பாஜக தலைமைகளை அதிரடியாக மாற்ற தொடங்கி உள்ளது டெல்லி மேலிடம். தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களின் பாஜக தலைவர்கள் மாற்றப்பட்டு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள பாஜக மிக தீவிரமாக தயாராகி வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை எதிர்க்க ஓரணியில் திரள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றன.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால் இந்த மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

5 மாநில தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தலை கணக்கில் கொண்டு பாஜக மேலிடம் தற்போது மாநில தலைவர்களை அதிரடியாக மாற்றி உள்ளது.
ஆந்திரா- முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி; தெலுங்கானா- மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி; பஞ்சாப்- சுனில் தாக்கர்; ஜார்க்கண்ட்- பாபுலால் மராண்டி ஆகியோர் புதிய பாஜகவின் மாநில தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சுனில் ஜார்க்கர், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தவர்.
ஆந்திராவில் சோமு வீரராஜு, தெலுங்கானாவில் பண்டி சஞ்சய், ஜார்க்கண்ட்டில் தீபக் பிரகாஷ், பஞ்சாப்பில் அஸ்வனி குமார் ஷர்மா ஆகியோர் பாஜக தலைவர்களாக பதவியில் இருந்தனர். இவர்கள் அனைவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பாஜகவில் உட்கட்சி பூசல் அதி உச்சத்தை எட்டி கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜகவின் எஸ்வி சேகர் போன்றவர்கள், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார் என கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களின் பாஜக தலைவர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது தமிழ்நாடு பாஜகவிலும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
தற்போது தெலுங்கானா மாநில பாஜக தலைவராக கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்யக் கூடும். பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது கடைபிடிக்கப்படுவதால் கிஷன் ரெட்டிக்கு பதிலாக வேறு ஒருவர் மத்திய அமைச்சராக நியமிக்கப்படக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
யார் இந்த புரந்தேஸ்வரி? : ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவின் மகள். தற்போதைய தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியின் உடன்பிறந்த சகோதரி. ஆந்திராவில் பாஜக, தெலுங்குதேசம் இடையே கூட்டணி அமையுமா? இல்லையா? என்பது பெரும் கேள்விக்குறியாகவும் விவாதமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திரா பாஜக தலைவராக என்.டி.ஆரின் மகளும் சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான புரந்தேஸ்வரி நியமனம் செய்யப்பட்டிருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications