காலையில் கலகலப்பாக மலர்ந்த தாமரை, மாலையில் வாடி சிங்கிள் டிஜிட்டுக்கே அல்லாடல்!
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை துரிதமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை மற்றும் வெற்றி நிலவரம் வெளியாகிவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி முன்னிலை பெற்று இருந்தாலும் கூட, ஆரம்பத்தில் பாஜக விடாமல் விஸ்வரூபம் எடுத்து, நல்ல போட்டி கொடுத்து வந்தது உண்மைதான்.

காலை 8.40 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 27 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இதில் கவனிக்க வேண்டிய ஒரு அம்சம் என்னவென்றால் 2015ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை விடவும் பாஜக இந்த தேர்தலில் நல்ல வெற்றியை ஈட்டும் நிலையில் இருந்தது.
அதேநேரம், காலை 10.30 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 49 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. அதாவது பாஜக கடந்த தேர்தலை விடவும் 17 இடங்களில் அதிகம் வெற்றி பெறும் வாய்ப்பில் உள்ளது. ஆனால் ஆம் ஆத்மி 17 இடங்களை இழக்கும் நிலையில் இருந்தன.
2015 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே பாஜக வெல்ல முடிந்தது.
இத்தனைக்கும் அதற்கு ஒரு வருடம் முன்பு தான் நாடு முழுக்க மோடி அலை வீசியது. டெல்லியிலும் தான். அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்து இருந்தது. ஆனால் அடுத்த வருடமே இப்படி ஒரு தீர்ப்பை வழங்கினார் மக்கள். அந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் இப்போது பாஜக எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லலாம் போலவே என்று அக்கட்சி தொண்டர்கள் மனதை தேற்றிக் கொண்டனர்.
ஆனால், நேரம்போக போக நிலைமை தலைகீழானது. பிற்பகல் 3 மணியளவில், ஆம் ஆத்மியின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத பாஜக சிங்கிள் டிஜிட் முன்னிலைக்கு இறங்கிப்போனது. ஆம்.. முதலில் 10 சீட் முன்னிலை என செய்தி வந்தது, பிறகு, 9, அதன்பிறகு 8 என்ற நிலை இருந்தது. 3.20 மணிப்படி இது இன்னும் குறைந்து வெறும் 7 தொகுதிகள் என்ற அளவுக்கு போய்விட்டது.
மத்தியில் இப்போது மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியில் இருக்கிறது. அப்படி இருந்தும் தலைநகரில் இவ்வளவு மோசமான தோல்வியை பாஜக பதிவு செய்யும் நிலை உருவாகியுள்ளது.
கண்டிப்பாக டெல்லியில் ஆளக்கூடிய ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்டு இருக்கக்கூடிய இயல்பான அதிருப்தியையும் தாண்டி கெஜ்ரிவால் சாதித்துள்ளார். வெறும் ஐந்து ஆண்டுகள் என்று கிடையாது, அதற்கு முன்பாக 2013ல் காங்கிரசுடன், கூட்டணி அமைத்தும் ஆட்சி செய்தது ஆம் ஆத்மி. எனவே தொடர்ந்து ஆட்சியில் இருக்க கூடியதால் ஆம் ஆத்மிக்கு எதிராக எழும் அதிருப்தி அலை பாஜகவுக்கு சாதகமாக சென்றிருக்க வேண்டும். ஆனால் அதைக்கூட பாஜகவால் ஆதாயமாக மாற்ற முடிவில்லை என்று தெரிவிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications