6வது கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 59 தொகுதிகள்.. பாஜக கோட்டையில் காத்திருக்கும் பெரும் சவால்
டெல்லி: 5 கட்ட லோக்சபா தேர்தல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 118 தொகுதிகளுக்காக, 2 கட்ட வாக்குப்பதிவு எஞ்சியுள்ளது.
இதில், 59 தொகுதிகளுக்கு, 6வது கட்ட வாக்குப்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் இதில் 44 தொகுதிகளை வென்றது பாஜக. ஆனால் இம்முறை அந்த தொகுதிகளில் நிலைமை மாறியுள்ளது.
6வது கட்ட தேர்தல் தொகுதிகளின் கள நிலவரம் குறித்து ஒரு பார்வை இதோ:

ஹரியானா நிலை
இம்மாநிலத்தில் உள்ள 12 தொகுதிகளுக்கும், மே 12ம் தேதிதான் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் இங்கு 7 தொகுதிகளை பாஜக வென்றது. இந்திய தேசிய லோக் தள் கட்சி 2 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றது. சமீபத்தில், ஜிந்த் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் காங். செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை வீழ்த்தி வெற்றி பெற்றது பாஜகவுக்கு நம்பிக்கையை தருகிறது. ஆனால், அங்கு லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது.

ஆட்சிக்கு எதிரான அதிருப்தி
ஏனெனில், பாஜகவின் லால் கட்டார் அரசு இவ்வாண்டு இறுதியில் ஆட்சி காலத்தை பூர்த்தி செய்கிறது. 5 ஆண்டுகால ஆட்சி மீதான இயல்பான அதிருப்தி பாஜக மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதேபோல, ஜாட் இனத்தினர், தங்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு கோட்டா விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் உள்ளனர்.

பீகார்
இம்மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கு 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 7 தொகுதிகளை பாஜக கடந்த முறை வென்றிருந்தது. கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சி 1 தொகுதியை வென்றது. இம்முறை நிதீஷ் குமார் கட்சி பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது இக்கட்சிக்கு பலமாகும். கடந்த வருடம், நடைபெற்ற 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், ராஷ்டிரிய ஜனதாதளம் 2 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜகவால் 1 தொகுதியில்தான் வெல்ல முடிந்தது. இம்முறை ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிர், விகாஷீல் இன்ஷாப் கட்சி, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. யாதவர், முஸ்லீம் மற்றும் மல்லா ஓட்டுக்கள், பாஜக கூட்டணிக்கு பெரும் சவாலாக மாற வாய்ப்பு உள்ளது.

மேற்கு வங்கம்
6வது கட்ட வாக்குப்பதிவை சந்திக்க உள்ள 8 தொகுதிகளையும் கடந்த முறை திரிணாமுல் காங்கிரஸ்தான் வென்றிருந்தது. எனவே என்னதான் மோடி மற்றும் அமித்ஷா இணைந்து, மமதா பானர்ஜிக்கு எதிராக தீவிர பிரச்சாரங்கள் நடத்தினாலும், பாஜகவுக்கு பெரும் சவாலான தொகுதிகள்தான் இவை.

மத்திய பிரதேசம்
15 வருடங்களுக்கு பிறகு, மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவை சந்திக்கும் 8 தொகுதிகளில், 7 தொகுதிகளை கடந்த முறை பாஜக வென்றது. காங்கிரசுக்கு 1 தொகுதி கிடைத்தது. இப்போது அம்மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவதால், கடந்த முறைபோல, பாஜகவுக்கு இம்முறை வெற்றி எளிதாக இருக்காது. போபால், குனா ஆகிய தொகுதிகள் விஐபி அந்தஸ்து பெற்றவையாக உள்ளன.

டெல்லி
தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளையும், கடந்த லோக்சபா தேர்தலின்போது வென்றது பாஜக. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, டெல்லி அரசியலை மாற்றிப்போட்டுவிட்டார். 2015ல், டெல்லியிலுள்ள 70 சட்டசபை தொகுதிகளில் 67 தொகுதிகளை, வென்றது ஆம் ஆத்மி. 3 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றது. அதேநேரம், உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இப்படியாக அங்கு டிரெண்ட் மாறியபடி உள்ளது.

ஜார்கண்ட்
மே 12ம் தேதி தேர்தலை சந்திக்கப்போகும் ஜார்கண்ட் மாநிலத்தின் அனைத்து 4 தொகுதிகளையும் கடந்த முறை பாஜக வென்றிருந்தது. ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி காலம் இவ்வாண்டுடன் நிறைவடைய உள்ளது. எனவே இயல்பாக மக்களிடம் உள்ள ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை பாஜகவுக்கு பாதகமாகும். மேலும், காங்கிரஸ், ஜேஎம்எம், ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா பிரகதிஷீல், ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகியவை இணைந்து மெகா கூட்டணி அமைத்து, பாஜகவை எதிர்கொள்ள உள்ளன. இது மற்றொரு சவாலாகும்.












Click it and Unblock the Notifications