இந்திய எல்லைக்குள் சீன நகரம்.. “ஒரு இஞ்ச்” கூட விட மாட்டோம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
டெல்லி: இந்திய எல்லைக்குள் ஒரு இஞ்ச் கூட சீனாவை மத்திய பாஜக அரசு அனுமதிக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லியில் தனியார் ஆங்கில தொலைக்காட்சி நடத்திய மாநாட்டில் முக்கிய பிரமுகர்கள், பொருளாதார அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் பேசிய அவர், மத்திய பாஜக அரசு நாட்டின் சுய மரியாதை, தன்னம்பிக்கை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் எவ்வித சமரசங்களையும் செய்யாது என்றார்.
இலங்கையில் இந்திய வெளியுறவுத்துறை குழு- கச்சத்தீவு மீட்பு பேச்சுவார்த்தையா? என எதிர்க்கட்சிகள் பீதி!
சீனாவை விட மாட்டோம்
அருணாசலப் பிரதேசத்திற்குள் சீனா குடியிருப்புகள், நகரங்களை கட்டி வருவது குறித்தும் லடாக் எல்லை பிரச்சனைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய அவர், "இந்திய எல்லைக்குள் ஒரு இஞ்ச் அளவுகூட சீனாவை மத்திய பாஜக அரசாங்கம் அனுமதிக்காது என்று உறுதியளித்தார்.
பயங்கரவாதம்
"மத்திய அரசு நாட்டுக்கு பல்வேறு பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்பட்டபோது அதை சிறப்பாக கையாண்டு இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரை தவிர்த்து நாட்டிற்கு வேறு எந்த பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கவில்லை. கடந்த ஓராண்டாக போர் நிறுத்த விதிகள் மீறப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்த வன்முறை சகாப்தத்திற்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது.
இந்தியாவின் சர்வதேச அந்தஸ்து
இந்தியாவின் ஒற்றுமைக்கு, பிராந்திர ஒருமைபாட்டிற்கும் யாராவது குந்தகம் விளைவிக்க முயன்றால் அதற்கு ஏற்ற பதிலடியை கொடுப்போம். இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர், சர்வதேச அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்து இருக்கிறது. இன்று இந்தியாவின் கருத்துக்களை உலகமே உற்று நோக்குகிறது. உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.
பொருளாதாரம்
இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் எந்த திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தாமதப்படுத்தியது கிடையாது. சர்வதேச பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக இந்தியர்கள் உள்ளனர். அரசின் ஒட்டுமொத்த நிதியும் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு முன்பாக 85 சதவீத பொது நிதி காற்றில் காணாமல் போய்விட்டது." என்றார்.