பணமதிப்பிழப்பு வழக்கு:மத்திய அரசுக்கு சிக்கல்? முக்கிய ஆவணங்களை ரெடியாக வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பணமதிப்பிழப்பு குறித்த ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணமதிப்பிழப்புக்கு தொடர்பான வழக்கு விசாரணை நவம்பர் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த டிஎஸ் தாக்கூர், பணமதிப்பிழப்பு என்பதற்கான அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது. மத்திய அரசின் பொருளாதார கொள்கையில் தலையிட முடியாது. மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் குறித்து கவலை தெரிவிக்கிறோம் என்றார்.

அரசியல் சாசன பெஞ்ச்
இதனைத் தொடர்ந்து பணமதிப்பிழப்பு விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்தது. அப்போது இதர உயர்நீதிமன்றங்களில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைக்கும் தடை விதித்தது உச்சநீதிமன்றம். ஆனால் மத்திய அரசின் இந்நடவடிக்கையில் சட்ட பிழைகள் உள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியதால் அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

5 நீதிபதிகள் பெஞ்ச் விசாரணை
உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது, இதுபோன்ற வழக்குகளை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க தேவையில்லை. தனிநபர்களின் பாதிப்புக்கு நிர்வாக ரீதியாக தீர்வு காணலாம் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இன்றைய விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரமும் ஆஜரானார்.

ப.சிதம்பரம் வாதம்
இன்றைய விசாரணையின் போது, 1978-ம் ஆண்டும் சிறிய அளவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு தனி சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது அத்தகைய நடைமுறை பின்பற்றப்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னதாக பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2016-ல் இது பின்பற்றப்படவும் இல்லை என்றார்.

மத்திய அரசுக்கு நெருக்கடி
அனைத்து தரப்பு விசாரணைகளின் பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுகளை ஆய்வு செய்யும் வழக்குகளில் லட்சுமண ரேகை என்ன என்பது எங்களுக்கு தெரியும். ரூ500, ரூ1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு தயாராக வைத்திருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி இது தொடர்பாக நடத்திய ஆய்வுகள் உள்ளிட்டவைகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இவ்வழக்கு விசாரணை நவம்பர் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications