Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யுஜிசி வரைவு விதிகள்- உயர் கல்வித் துறையை காவு கொள்ளும் மத்திய பாஜக அரசு- மாணவர்கள் எதிர்காலம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக அரசானது புதிய கல்விக் கொள்கை தொடங்கி தற்போதைய பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC- யுஜிசி) புதிய வரைவு ஒழுங்குமுறை வரை கல்வித்துறையை சர்வமும் நாசமாக்கி ஒட்டுமொத்தமாக இந்திய மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் சீரழிவு வேலைகளைத்தான் செய்து வருகிறது என்பதையே கல்வியாளர்கள் மற்றும் மாநில அரசுகளின் கடும் எதிர்ப்புகள் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகின்றன.

மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் நிராகரித்துவிட்டன; இதனையடுத்து ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்க முயற்சிக்கின்றன. ஏற்கனவே நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளால் மாணவர்களின் உயர்கல்வி கனவே சிதைக்கப்பட்டு கொள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இந்த தருணத்தில்தான் யுஜிசி எனப்படும் பல்கலைக் கழக மானியக் குழு வரைவு விதிகளை வெளியிட்டு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுகிறது என்பதைவிட மக்களின் காயங்களின் மீது கல் உப்பை தேய்த்துக் கொண்டே இருக்கிறது.

education ugc tamilnadu

அப்படி என்ன செய்துவிட்டது யுஜிசி புதிய வரைவு விதிகள்? இதன் முக்கிய அம்சமே துணைவேந்தர் நியமனம்தான். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக ஏற்கனவே மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் மாநில முதல்வர்களுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் மாநிலங்களின் பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து பறித்து மாநில முதல்வரே வைத்துக் கொள்வது என்கிற முடிவில் பல மாநிலங்களும் தெளிவாக இருக்கின்றன. இதில் தமிழ்நாடும் ஒன்று.

ஏனெனில் பல்கலைக் கழகங்கள் என்பவை மாநில அரசின் நிதியால் கட்டப்படுகிறவை; மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை; தங்களது மாநில மாணவர்களுக்கான வளமான கல்வியை கொடுக்க வேண்டிய கட்டமைப்பை உருவாக்கி தமது கடமையைச் செய்ய வேண்டிய முழுப் பொறுப்பும் மாநில அரசுகளுக்குதான் உண்டு; தமிழ்நாடு போன்ற கல்வியின் தேவையைப் புரிந்து கொண்ட மாநிலங்கள் இதில் அதீத அக்கறை செலுத்துவதில் வியப்பு இல்லை.

இதனால்தான் ஆளுநர் தன்னிச்சையாக கல்வி விவகாரங்களில் தலையிடுவதற்கு மாநில அரசுகள் கடிவாளம் போட்டு கட்டிப் போட முனைகின்றன. ஆனால் தற்போதைய யுஜிசி வரைவு விதிகளோ ஆளுநர்களை 'கழற்றிவிட்ட காளை'களைப் போல உயர்கல்வித் துறையில் நுழைந்து சர்வநாசம் செய்ய வழிவகுத்து இருக்கிறது என்பதுதான் அனைவரது கவலையுமாகும்.

பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க தேடுதல் குழுக்கள் அமைக்கப்படும்; இந்த தேடுதல் குழுக்களில் பொதுவாக மாநில அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக ஆட்சிக் குழு எனப்படும் சிண்டிகேட்டின் பிரதிதி மற்றும் ஆட்சிமன்றக் குழு எனப்படும் செனட்டின் பிரதிநிதி இடம் பெறுவர். ஆனாலும் இந்த நடைமுறையை தமிழ்நாடு ஆளுநர் போன்றவர்கள் மாற்றுவதற்கு நீண்ட காலமாக மல்லுக்கட்டிக் கொண்டு யுஜிசி பிரதிநிதியை இணைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

சரி இப்போது யுஜிசி என்ன செய்திருக்கிறது தெரியுமா? மாநில அரசுகளின் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க அமைக்கப்படும் தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, யுஜிசி பிரதிநிதி, சிண்டிகேட் பிரதிநிதி மட்டும் இருப்பார்களாம். மாநில அரசின் பிரதிநிதிக்கு இடமே இல்லையாம்.

மாநில அரசுகளுக்கு சொந்தமான இந்த பல்கலைக் கழகங்களில் மாநில அரசுகளுக்கு உரிமையே கிடையாதாம்.. இது என்ன கொடுமை? எமெஜர்ன்சியை விட மிக மோசமான நடைமுறை என்கின்றனர் கல்வியாளர்கள்.ச்

சரி தேடுதல் குழுதான் பிரச்சனையா.. இல்லை இனிமேல் துணைவேந்தர்கள் ஆகச் சிறந்த கல்வியாளர்களோ, துறைசார் வல்லுநர்களாகவோ இருக்க வேண்டிய தேவையே இல்லை என்கிறது யுஜிசி வரைவு விதி. சரி யாரைத்தான் துணை வேந்தராக்கலாம் என்றால் சமூகத்தில் வெற்றி பெற்ற ஒரு பிரமுகரைக் கூட துணைவேந்தராக நியமிக்கலாமாம்.. அடக் கொடுமையே! கல்வி என்ன கடை சரக்கா? சாராய ஆலை அதிபர்கள் கூட கல்வி நிறுவனங்கள் நடத்துகின்றனர்; சினிமா தயாரிப்பாளர்கள் கூட கல்வி நிறுவன்ங்கள் நடத்துகின்றனர்.. இத்தகையவர்கள்தான் இனி பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்களாக வருவார்களாம்.. அதாவது 'கல்லா' கட்டுகிற தொழிலாக பல்கலைக் கழகங்களை பாழும் படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறது மத்திய அரசு. இதனைத்தான் யுஜிசி வரைவு விதிகள் வெளிப்படுத்துகின்றன. இதனால்தான் தமிழ்நாடு அரசின் சட்டசபையில் இதற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இப்படியான சரத்துகளைக் கொண்ட யுஜிசி வரைவு விதிகளை பெரும்பாலான- பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள் நிராகரித்துவிட்டன. ஆனாலும் மாநில உரிமைகளைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்ற 'ஒற்றை' இந்தியாவாதத்தை முன்வைக்கிற மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒற்றை காலில் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருப்பது என்பது ஒட்டுமொத்த தேசத்தின் உயர்கல்வித் துறையை சீர்குலைத்து புதைகுழிக்குதான் தள்ளிவிடும் என்பதுதான் சமூக அக்கறையுள்ள அனைவரது ஆழ்ந்த கவலை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+