தேர்தல் பத்திரம்.. கமிஷன் வாங்கவே பாஜக கொண்டு வந்தது.. நீதிமன்றம் தீர்ப்பு பற்றி ராகுல் ரியாக்ஷன்
டெல்லி: பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரம் சட்ட விரோதமானது என்றும் அவற்றை ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்த நிலையில், ஊழல் மற்றும் கமிஷன் பெறுவதற்கான ஒரு தடமாக பாஜக தேர்தல் பத்திரங்களை உருவாக்கியது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-18 ஆம் நிதியாண்டுக்கு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானது. 2018 ஆம் ஆண்டு இந்த திட்டம் அமலுக்கு வந்தது. தேர்தல் பத்திரங்களை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும்.

ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். இதுவே தேர்தல் காலத்தில் மட்டும் மாதம் முழுவதும் விற்பனை செய்யப்படும்.
தனிநபர்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடை அளிக்கலாம். தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் விவரம் எதுவும் இருக்காது. எனவே, இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.
உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் பத்திர திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தது. இதில், தேர்தல் பத்திரம் என்பது சட்ட விரோதமானது என்றும் அவற்றை ரத்து செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவே இந்த பத்திரங்கள் வழியாக அதிக நன்கொடை பெற்ற கட்சியாக உள்ளது.
அதாவது, தேர்தல் பத்திர திட்டம் அமல்படுத்தப்பட்ட 6 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:- நரேந்திர மோடியின் ஊழல் கொள்கையின் மற்றும் ஒரு ஆதாரம் உங்கள் முன் வந்துள்ளது. ஊழல் மற்றும் கமிஷன் பெறுவதற்கான ஒரு தடமாக பாஜக தேர்தல் பத்திரங்களை உருவாக்கியது. இன்று இந்த விவகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications