சிக்கும் பாஜக எம்பி.. நாடாளுமன்ற தாக்குதல் கும்பல் தலைவன் ஷர்மாவுக்கு டிக்கெட் கொடுத்ததே அவர்தானாம்
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது கலர் புகை குண்டுகளுடன் அவைக்குள் குதித்த கும்பலின் தலைவன் சாகர் ஷர்மாவுக்கு பார்வையாளர் டிக்கெட் பெற்றுக்கொடுத்தவர் பாஜக எம்பி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
டிசம்பர் 13 ஆம் தேதியான இன்றுடன் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆண்டுகள் ஆகிறது. இந்த நினைவு நாளை முன்னிட்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மக்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எதிர்க்கட்சித் தலைவர்கள்கள், எம்பிக்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதனை அடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவயில் குளிர்கால கூட்டத்தொடருக்கான வழக்கமான நடைமுறைகள் தொடங்கின. மக்களவையில் எம்பிக்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். குறிப்பாக மேற்கு வங்க மாநில பாஜக எம்பி ககன் முர்மு அவையில் உரையாற்றிக்கொண்டு இருந்தபோது பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து இருந்த இளைஞரும் பெண்ணும் திடீரென அவைக்குள் குதித்தனர். கைகளில் மஞ்சள் நிற புகையை கக்கும் பொருளை வைத்து இருந்த அவர்கள் மேஜைகளில் குதித்து ஓடினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த எம்பி பேச்சை நிறுத்தினார். சில வினாடிகள் மக்களவை திகைத்துப்போயினர். அத்துமீறி உள்ளே நுழைந்த கும்பல் மஞ்சள் புகை கக்கும் பொருளுடன் எம்பிக்கள் அமர்ந்து இருக்கும் இருக்கைகள், மேஜைகளில் தாவி குதித்து சபாநாயகரின் இருக்கையை நோக்கி வேகமாக ஓடினர். அவர்கள் கைகளில் வைத்து இருந்த பொருளால் மக்களவை அரங்கமே மஞ்சள் புகை மூட்டமாக மாறியது. ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எம்பிக்கள் அனைவரும் இருக்கைகளை விட்டு எழுந்து நின்றனர்.
இந்தியாவின் உட்சபட்ச பாதுகாப்பு நிறைந்த நாட்டின் தலைமை பீடமாக உள்ள நாடாளுமன்றத்திலேயே அனைத்து பாதுகாப்புகளையும் மீறி ஒரு கும்பல் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அத்துமீறி அவைக்குள் குதித்த இருவரையும் காவலர்கள் கைது செய்து உள்ளனர். கைதான பெண் அரியானா மாநிலத்தை சேர்ந்த நீலம் (வயது 42) என்றும் தெரியவந்து உள்ளது. மற்றொரு இளைஞர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அமோல் ஷிண்டே (வயது 25) என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் சாகர் ஷர்மா என்றும் அவருக்கும் பார்வையாளர் மாடத்தில் அமர்வதற்கான டிக்கெட்டை பெற்றுக்கொடுத்து பரிந்துரை செய்தவர் கர்நாடக மாநிலம் மைசூர் தொகுதி பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா என்று பெரும்பாலான ஆங்கில மற்றும் வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இவர்கள் யார்? என்ன நோக்கத்துக்காக இவ்வாறு செய்தார்கள்? பாஜக எம்பிக்கும் இவர்களுக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பது குறித்த விரிவாக தகவல்கள் விசாரணையின் இறுதியில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications