48 ஆண்டுகளுக்கு பின் தேர்தல்: லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு- மோடி, ராகுல் வாழ்த்து!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு விடுதலை அடைந்த பின்னர் 4--வது முறையாக லோக்சபா சபாநாயகர் (மக்களவைத் தலைவர்) பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெற்றதாகவும் 18-வது லோக்சபா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாகவும் தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் அறிவித்தார். இந்த முடிவுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. கடந்த 2 நாட்களாக புதிய எம்பிக்கள் பதவியேற்றனர். இதனையடுத்து புதிய சபாநாயகர் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

lok sabha speaker election 2024 parliament

மத்திய அரசின் முயற்சி தோல்வி: தற்போதைய 18-வது லோக்சபா தேர்தலுக்குப் பின் மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில் 234 எம்பிக்கள் உள்ளனர். அதாவது வலிமையான எதிர்க்கட்சி உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் லோக்சபா சபாநாயகர் பதவி தொடர்பான எதிர்க்கட்சிகளுடனான மத்திய அரசின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை விட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

மோதியது யார்? யார்?: இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் லோக்சபா சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது. இந்தியா கூட்டணியின் சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிட்டார். பாஜக கூட்டணியின் வேட்பாளராக 17-வது லோக்சபா சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா போட்டியிட்டார். இதனையடுத்து இன்று முற்பகல் 11 மணிக்கு லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

சபாநாயகர் பதவிக்கான தேர்தல்: இன்று காலை லோக்சபா கூடியதும் பதவியேற்காத புதிய எம்பிக்கள் பதவியேற்றனர். இதன் பின்னர் லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் நடத்தினார். பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்பிக்கள் வழி மொழிந்தனர். இதேபோல இந்தியா கூட்டணி வேட்பாளர் பெயரை கொடிக்குன்னில் அதன் எம்பிக்கள் முன்மொழிந்தனர். திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.

குரல் வாக்கெடுப்பில் ஓம் பிர்லா தேர்வு: பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் முடிவில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா, லோக்சபா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.

இருக்கையில் அமர வைத்த மோடி-ராகுல்: பின்னர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து வாழ்த்துத் தெரிவித்தனர். பின்னர் பிரதமர் மோடி உள்ளிட்டோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திப் பேசினர்.

4-வது சபாநாயகர் தேர்தல்: நாடு விடுதலைக்குப் பின்னர் நடைபெற்ற 4-வது சபாநாயகர் தேர்தல் இது. 1952, 1967 மற்றும் 1976 என 3 முறை சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. 48 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

சபாநாயகர் யார்?: ஒவ்வொரு லோக்சபாவின் முதலாவது கூட்டத்தில்தான் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். சபாநாயகர் இடைக்காலத்தில் பதவி விலகாதவரை 5 ஆண்டுகாலத்துக்கும் அப்பதவியில் ஒருவரே தொடர்ந்து நீடிப்பார். லோக்சபாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர் சபாநாயகர்.

சபாநாயகரின் அதிகாரம் என்ன?: லோக்சபாவில் எந்த ஒரு தீர்மானத்தையும் சபாநாயகரின் அனுமதி இல்லாமல் கொண்டுவரவும் முடியாது. அரசின் மசோதாக்களை ஏற்பது, நிராகரிப்பது ஆகியவையும் சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது ஆகும். எம்பிக்கள் கட்சித் தாவல் விவகாரத்தில் சபாநாயகரின் முடிவுதான் அதிகாரம் கொண்டதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+