பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
டெல்லி: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் அமைப்பையே மாற்றிவிடும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால் எங்களுக்கு அந்த எண்ணம் இல்லை என்று ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் அமைப்பையே மாற்றிவிடும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஆனால், தங்களுக்கு அப்படியான ஒரு எண்ணம் இல்லை என்றும் நினைத்து இருந்தால்.. முன்பே மாற்றியிருப்போம் என்றும் உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கூறினார்.

யாரையும் தொட விட மாட்டோம்: ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:- எங்களுக்கு 10 ஆண்டுகளாக பெரும்பான்மை இருந்தும் நாங்கள் அதை தவறாக பயன்படுத்தவில்லை. காங்கிரஸ்க்கு தன் பெரும்பான்மையை தவறாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. எங்களுக்கு கிடையாது. இட ஒதுக்கீட்டு கொள்கையை ஒருபோதும் மோடி அரசு மாற்றாது.
நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.. வேறு யாரையும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட விட மாட்டோம். மீண்டும் பாஜக ஆட்சி வந்தால் அரசியலமைப்பு மாற்றி அமைக்கப்படும் என்று கூறுவது ஏற்க இயலாதது. அரசமைப்பை மாற்ற நாங்கள் நினைத்து இருந்தால் முன்னரே அதை செய்து இருப்போம். அரசியலமைப்பில் இருந்து மதசார்பின்மை என்பதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
வரவேற்க தயாராக இருக்கிறோம்: நாட்டை மதச்சார்பற்ற நாடாக மாற்ற வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம். அதனால் தான் நாங்கள் பொது சிவில் சட்டம் கொண்டு வருகிறோம். அவர்கள் ஷரியா சட்டத்தின் கீழ் நாட்டை நடத்த நினைக்கிறார்கள். மதசார்பற்றவர்களாக அவர்களும் மாற வேண்டியது அவசியம். நக்சலைட்டுகள் வன்முறையை கைவிட வேண்டும். 90 நாட்களாக சத்தீஸ்கரில் ஆளும் பாஜக அரசு நக்சல்களுக்கு எதிராக போராடி வருகிறது.
இந்தியாவில் இருந்து மாவோயிசம் முழுமையாக அழிக்கப்படும். நானும் பிரதமர் மோடியும் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், ஆயுதங்களை கைவிட்டு வருபவர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம். ஆனால், நீங்கள் ஆயுதங்களை கையில் எடுத்தால் பாதுகாப்பு படையினரிடம் இருந்துதான் உங்களுக்கு பதில் கிடைக்கும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
தேர்தல் பத்திரம்: தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து பேசிய அமித்ஷா, "அவர்கள் கட்சியும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெற்றுள்ளது. அதுவும் மிரட்டி பணம் பறித்ததா? நாங்களும் மிரட்டி பறித்தோம் என்று ராகுல்காந்தி மக்களிடம் சொல்ல வேண்டும்.
எங்களை விட காங்கிரசே: காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் எம்பிக்களின் விகிதத்தில் பார்த்தால் எங்களை விட அதிகமாக அவர்கள் நிதி பெற்று இருக்கிறார்கள். எங்களுக்கு எதிராக ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. எனவே குழப்பத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சிக்கிறார்கள். இதில் அவர்களால் வெற்றி பெற முடியாது. நாடு முழுவதும் நான் பயணம் மேற்கொண்டுள்ளேன். எங்கு பார்த்தாலும் மோடிக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications