தனி தமிழ்நாடு கோரிக்கை..ஆ.ராசாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: சு.சுவாமி
டெல்லி: தனி தமிழ்நாடு கோரிக்கையை ஆதரித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக லோக்சபா எம்.பி.யுமான ஆ.ராசாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி என்ற தலைப்பில் ஆ.ராசா உரையாற்றினார். அவர் தமது உரையில், பிரிவினை வேண்டும், தனித் தமிழ்நாடு வேண்டும். இளைஞர்களே முன்வாருங்கள். பேட்ஜ் அணிந்துகொள்ளுங்கள். சுதந்திரத் தமிழ்நாடுதான் நம்முடைய கடைசித் தீர்வு என்று பெரியார் சொன்னார். பெரியாரை முழுமையாக ஏற்றுக்கொண்ட நாங்கள் அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக எங்கள் தந்தையையும் ஒதுக்கிவிட்டு இந்தியா வாழ்க என்று சொன்னோம். இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

தனிநாடு கோரிக்கை
பா.ஜ.க அமித் ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்குச் சொல்கிறேன்... உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக்கொண்டு சொல்கிறேன். அண்ணாவழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர். எங்களை பெரியார் வழிக்குத் தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓய மாட்டோம் என்றார்.

சு.சுவாமி கண்டனம்
ஆ.ராசாவின் இந்த பேச்சு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டிவி விவாதம் ஒன்றில் இது தொடர்பாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்றுப் பேசினார். அவர் ஆ.ராசாவின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

கைது செய்ய வேண்டும்- சு.சுவாமி
மேலும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீனில்தான் ஆ.ராசா வெளியில் இருக்கிறார். ஆகையால் ஆ.ராசாவின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும். ஆ.ராசாவுக்கு சிறை ஒன்றும் புதியதும் அல்ல. ஆகையால் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

பாஜக தலைவர்கள் எதிர்ப்பு
இதேபோல் கோவையில் பேசிய பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், . 2 ஜி் பணத்தை வைத்து செலவு செய்கிறார் ஆ.ராசா. அவர் பிரிவினைவாதத்தை கையில் எடுத்தால் அவருடைய அத்தியாயம் முடிய போகிறது என்று அர்த்தம். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். மேலும் பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ஆ.ராசா தனிநாடு கேட்டு பேசுகிறார். அப்படியானால் நாங்கள் தமிழ்நாட்டை 2 ஆக பிரிக்க வேண்டும் என கோருவோம். தமிழகத்தில் இனி தனி மாநில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications