ரஃபேல் விவகாரத்தில் மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்
Recommended Video
டெல்லி: ரஃபேல் விவகாரத்தில் பொய் சொன்ன ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத், பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதலில் உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடர் என கூறிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் தாம் தவறாக கூறிவிட்டதாக ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார். இன்று இவ்வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ராகுலுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தது.
ராகுல் பொய்
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலை தெரிவித்திருந்தார். பிரான்ஸ் அதிபர் மெக்ரோன் ரஃபேல் விவகாரம் குறித்து தம்மிடம் தகவல்களை பரிமாறிக் கொண்டதாக நாடாளுமன்றத்தில் ராகுல் கூறினார். ஆனால் இதனை பிரான்ஸ் அதிபர் மறுத்ததுடன் ராகுல் காந்தி பொய் சொல்வதாகவும் தெரிவித்திருந்தார்.
ராகுலுக்கு எச்சரிக்கை
ராகுல் காந்தியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மிகவும் கவனமுடன் பேச வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ரஃபேல் போர் விமானங்களின் தன்மை குறித்து எந்த சந்தேகமும் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மன்னிப்பு கேளுங்கள்
ரஃபேல் போர் விமான விவகாரத்தில் உச்சநீதிமன்றமே பிரதமர் மோடியை திருடர் என கூறிவிட்டதாக ராகுல் மிகப் பெரிய பொய்யை கூறியிருந்தார். அது பொய்தான் என உச்சநீதிமன்றம் ஒருமனதாக கூறிவிட்டது. ஆகையால் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
உண்மை வென்றது
ரஃபேல் போர் விமானம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மைக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
நட்டா வலியுறுத்தல்
இதேபோல் பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா, ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்றம் தொடங்கி நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் பரப்பி வந்தது. இப்போது உண்மை என்னவென்று தெரியவந்துள்ளது. ஆகையால் ராகுல் காந்தி இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
அமித்ஷா கருத்து
இதேபோல் பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில், ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியது வெட்ககேடானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை முடக்கிய நேரத்தில் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம். காங்கிரஸ், அதன் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.