டெல்லியில் ஒரு "அப்பாவு.." அன்று, குண்டுகட்டாக தூக்கி வீசப்பட்ட விஜேந்தர் குப்தா இன்று சபாநாயகர்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபையின் புதிய சபாநாயகராக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ரோஹினி தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றவருமான விஜேந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். 2015-ம் ஆண்டு டெல்லி சட்டசபையில் இருந்து குண்டு கட்டாக சபை காவலர்களால் தூக்கி வீசப்பட்ட விஜேயந்தர் குப்தா இன்று அதே சட்டசபையின் சபாநாயகராகிறார்.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவியேற்றார். டெல்லியில் பாஜகவின் 4-வது முதல்வர். பாஜகவின் 2-வது பெண் டெல்லி முதல்வர் ரேகா குப்தா. ரேகா குப்தாவுடன் முதல் கட்டமாக 6 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.

டெல்லி முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்த விஜேந்தர் குப்தா, தற்போது டெல்லி சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் விஜேந்தர் குப்தா. 1980களில் இருந்து விஜேந்தர் குப்தாவின் அரசியல் பயணம் தொடங்கியது. டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்க முன்னாள் தலைவராகவும் பணியாற்றியவர்.
1997-ல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ரோஹினி வார்டில் போட்டியிட்டு வென்றார். 3 முறை இதே ரோஹினி வார்டு கவுன்சிலராக வென்ற விஜேந்தர் குப்தா, அந்த பகுதியை முன்மாதிரி வார்டாகவும் உருவாக்கினார்.
2009-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சாந்தினி சவுக் தொகுதியில் காங்கிரஸின் கபில் சிபலை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். 2010-ம் ஆண்டு டெல்லி பாஜக தலைவரானார். 2013-ம் ஆண்டு தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார்.
ஆனால் 2015, 2020, 2025 ஆகிய 3 சட்டசபை தேர்தல்களிலும் ரோஹினி சட்டசபை தொகுதியில் தொடர்ந்து வெற்றி வாகை சூடியவர் விஜேந்தர் குப்தா. தற்போதைய தேர்தலில் பாஜக வேட்பாளர்களிலேயே மிக அதிகபட்சமாக 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் விஜேந்தர் குப்தாதான்.
டெல்லி முதல்வர் பதவிக்கான போட்டியில் சீனியரான விஜேந்தர் குப்தா பெயரும் அடிபட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையீட்டால் ரேகா குப்தா டெல்லி முதல்வராகிவிட்டார். இதனைத் தொடர்ந்து விஜேந்தர் குப்தா, டெல்லி சட்டசபை சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 3 இடங்களில்தான் வென்றது. அந்த 3 பேரில் ஒருவர் விஜேந்தர் குப்தா. எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜேந்தர் குப்தா பதவி வகித்தார். 2015-ம் ஆண்டு நவம்பர் 30-ந் தேதி டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக எம்.எல்.ஏக்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு பெரும் அமளி நிலவியது. அப்போது, சபாநாயகரால் குண்டு கட்டாக சட்டசபையில் இருந்து தூக்கி வீசப்பட்டவர் விஜேந்தர் குப்தா. இன்று அதே சட்டசபையில் அதே சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சபையை வழிநடத்த இருக்கிறார் விஜேந்தர் குப்தா.
டெல்லியில் ஒரு 'அப்பாவு'
விஜேந்தர் குப்தா, சட்டசபையில் இருந்து தூக்கிவீசப்பட்ட காலம் இருந்தது.. இப்போது அதே சட்டசபைக்கு தலைவராக- சபாநாயகராகவும் ஆகி இருக்கிறார். இதேபோல ஒரு ஒற்றுமை தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவுக்கும் இருக்கிறது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் அப்பாவு தோற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தபால் வாக்குகளை எண்ணாமலேயே தம்மை தோற்றுவிட்டதாக அறிவித்ததாக எதிர்ப்பு தெரிவித்து அப்பாவு தர்ணா போராட்டம் நடத்தினார். அப்போது அப்பாவும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து குண்டு கட்டாக தூக்கி வீசப்பட்டார். இது தொடர்பாக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றார் அப்பாவு. 2021 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அப்பாவு, தமிழக சட்டசபை சபாநாயகராக்கப்பட்டார் என்பதும் வரலாறு.












Click it and Unblock the Notifications