பீகாரில் பெரும் அடியை சந்திக்கும் பாஜக.. சீட் மொத்தமா கைமாறுது.. லோக் போல் சர்வே ரிசல்ட்!
டெல்லி: பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி பாஜகவுக்கு கடும் போட்டியாக இருக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற உள்ளது. லோக்சபா தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில், நாடு முழுவதும் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன.

இதற்கிடையே, பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. லோக் போல் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் மாநில வாரியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பீகார் மாநிலத்தில் லோக் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய அரசியலில் மிக முக்கியமான மாநிலமாக பீகார் பார்க்கப்படுகிறது. லோக்சபாவுக்கு அதிக அளவு எம்.பிக்களை அனுப்பும் மாநிலங்களில் 4வது இடத்தில் பீகார் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆர்எல்எஸ்பி கூட்டணி மொத்தமுள்ள 40 இடங்களில் 39 தொகுதிகளை வென்றது. அதன்பிறகு கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். பின்னர் மீண்டும் பாஜகவோடு கைகோர்த்தார்.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி 24 - 25 இடங்களைக் கைப்பற்றும் என லோக் போல் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி 15 -16 இடங்களைக் கைப்பற்றும் என லோக் போல் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சி தனியாக 4 -5 இடங்களில் வெற்றி பெறக்கூடும் என இந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி கடந்த முறை 39 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை சுமார் 15 சீட்களை தவற விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம், வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டுள்ளதே இந்த பின்னடைவுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பீகாரில் நிதிஷ் குமார் அரசின் மீதான அதிருப்தி அலை, மோடியின் செல்வாக்கை பீகாரில் சரியச் செய்வதாக லோக் போல் தெரிவிக்கிறது. தேஜஸ்வி யாதவ், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது இந்தியா கூட்டணிக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications