வடக்கே காங்கிரஸ் ஆதரவு அலை? '400' இடம் கனவு அம்போ? பாஜக மேலிடத் தலைவர்களே ஒப்புதல் வாக்குமூலம்?
டெல்லி: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கும் 400 தொகுதிகளில் வெல்வோம் என்ற கனவு நிச்சயம் நடக்காது ஒன்றுதான் என பாஜகவின் மேலிடத் தலைவர்கள் சிலரே பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18-வது லோக்சபா தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. 6-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. இறுதி மற்றும் 7-வது கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ந் தேதி நடைபெறும்.

லோக்சபா தேர்தலின் தொடக்கத்தில் பாஜகவுக்குதான் பேராதரவு என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு பரப்பிவிடப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசும் ஒவ்வொரு பேச்சுமே உண்மையிலேயே பாஜகவுக்கு அப்படியான ஆதரவு எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
அதேநேரத்தில், 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்களைக் கைப்பற்றியது பிரம்மாண்டமாக இருந்திருக்கலாம். உண்மையில் பாஜக 40 இடங்களில் போராடித்தான் வென்றது. அதாவது அந்த 40 தொகுதிகளின் நிலவரம் வேறானதாக இருந்திருந்தால் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைத்திருக்காது என்கிற உண்மையை அக்கட்சித் தலைவர்கள் தெளிவாகவே உணர்ந்திருப்பதால் இம்முறையும் அதுபோலத்தான் ரிசல்ட் இருக்குமோ என அஞ்சுகின்றனர்; அதனையே தேர்தல் பிரசாரங்களில் வெளிப்படுத்தவும் செய்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு பேராதரவு அலை இருந்தது; ஆனால் இப்போது ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் ஒவ்வொரு மாதிரி பிரதமர் மோடி உள்ளிட்டோர் பேசுவது பூமராங் மாதிரி திருப்பித் தாக்கிவிட்டது; மக்களிடம் அவநம்பிக்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது; இது காங்கிரஸுக்கு சாதகமான பேராதரவை உருவாக்குகிறது என உ.பி. மாநில பாஜக தலைவர்கள் களத்தில் இருந்து ஒப்புக் கொள்வதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
அத்துடன் 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களில்தான் வென்றது; நிச்சயம் இந்த முறை அதைவிட கூடுதலாக 90 முதல் 110 இடங்கள் வரை காங்கிரஸ் கைப்பற்றும் என்கிற நிலைமைதான் களத்தில் இருக்கிறது. இதனால் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கக் கூடிய சாத்தியம் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. இருப்பினும் பாஜகவால் 260 இடங்களைக் கைப்பற்றினாலே போதும்.. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்கிற கருத்தை பாஜக மேலிடத் தலைவர்கள் சிலர் பெயரை தெரிவிக்க மறுத்து ஊடகங்களிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தென்னிந்திய மாநிலங்களில் 132 தொகுதிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக பாஜகவால் 20 முதல் 25 இடங்களில்தான் வெல்ல முடியும். இது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகளின் பலத்தை அதிகரிக்கும்; ஒருவேளை காங்கிரஸ் 100-க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் நிலைமை உருவானால் இந்தியாவில் மீண்டும் "கூட்டணி ஆட்சி சகாப்தம்" உதயமாகும் சூழ்நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவும் தடுக்கவும் முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதனால் டெல்லி பாஜக தலைவர்கள் உச்சகட்ட பதற்றத்தில் இருக்கின்றனர் எனவும் சீனியர் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.











Click it and Unblock the Notifications