என்னை “ஜேக்கி”ன்னும் கூப்டுவாங்க.. ‘பாரத்’ என மாறினாலும் ‘இந்தியன்’ - ஜெயிலர் நடிகர் ஜாக்கி ஷராப்
டெல்லி: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது தொடர்பாக இந்தி நடிகர் அமிதாப் பச்சனை தொடர்ந்து ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஜி20 மாநாட்டிற்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய அழைப்பிதழில் இந்தியா என்ற பெயருக்கு பதில் பாரத் என குறிப்பிடப்பட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இம்மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் பாரத் என பெயர் மாற்றும் தீர்மானத்தை மத்திய அரசு கொண்டு வரும் என கூறப்படுகிறது.

இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவாகவும், பலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜெயிலர் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷராப் இந்த பெயர் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். ஜாக்கி ஷராப் மற்றும் தியா மிர்சா ஆகியோர் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 'பிளானட் இந்தியா' பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "முன்னதாக, நமது நாடு பாரத் என்று அழைக்கப்பட்டது தானே? என் பெயர் ஜாக்கி. ஆனால் சிலர் என்னை ஜேக்கி, சிலர் என்னை ஜோக்கி என்று அழைக்கிறார்கள். அவர்கள் என் பெயரை மாற்றுகிறார்கள், அதனால் நான் மாற மாட்டேன். பெயர் மட்டும் மாறும், நாங்கள் மாற மாட்டோம்.
நீங்கள் நாட்டின் பெயரை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஒரு இந்தியர் என்பதை மறந்துவிடாதீர்கள்." என்று தெரிவித்தார். இதற்கு முன்பாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தியா, பாரத் பெயர் பிரச்சனையால் நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்து கொண்டு இருக்க அமிதாப் பச்சன் திடீரென, "பாரத் மாதா கி ஜெய்" என்று எழுதினார். அமிதாப் பச்சனின் ட்வீட்டைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரதமர் மோடி இந்தியா என்ற பெயரை மாற்ற பயப்படுகிறார் என்று குற்றம்சாட்டினார்.
சவுத்ரி கூறுகையில், "இந்தியா என்ற பெயர் வெளிநாடுகளால் வழங்கப்பட்டது. எனவே, பிரதமர் இந்தியா என்ற பெயரைக் கேட்பதையே வெறுக்கிறார். INDIA என்ற எதிர்க்கட்சி கூட்டணி உருவான நாள் முதல் பிரதமருக்கு இந்தியா என்ற பெயர் மீதான வெறுப்பு அதிகரித்து உள்ளது" என்றார். இந்திய அரசியலமைப்பின் 1வது பிரிவு, "இந்தியா, அதாவது பாரத், மாநிலங்களின் ஒன்றியம்" என்று கூறுகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications