விமானத்திற்கு வந்த மிரட்டல்.. கைதான இந்திய உளவு அதிகாரி! ஆனால் கடைசியில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்
டெல்லி: நமது நாட்டில் விமான நிறுவனங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அப்படிக் கடந்த மாதம் இண்டிகோ விமானம் ஒன்றுக்குப் போலியான வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இதனால் அங்கே ஒரு உளவு பிரிவு அதிகாரியே கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது என்ன நடந்தது.. இதனால் உளவுத் துறை அதிகாரி கைதாக என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் விமான நிறுவனங்களுக்கு அதிக செலவாகும் நிலையில், பயணிகளுக்கும் நேர விரயம் ஆகிறது.

கடந்த மாதம் அப்படி தான் இண்டிகோ விமானம் ஒன்றுக்கு மிரட்டல் வந்தது. ஆனால், இதில் உளவுத் துறை அதிகாரி ஒருவர் கைதானது பரபரப்பைக் கிளப்பியது.
கைது: அதாவது அந்த விமானம் நாக்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டது. அந்த விமானத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அது அவசர அவசரமாக சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் தரையிறங்க வேண்டி இருந்தது. அந்த விமானத்தில் 187 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் என மொத்தம் 193 பேர் இருந்த நிலையில், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவத்தால் ஒரு உளவுத்துறை அதிகாரியே கைது செய்யப்பட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
என்ன நடந்தது: இந்தச் சம்பவம் கடந்த நவம்பர் 14ம் தேதி நடந்துள்ளது. அன்றைய தினம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அந்த விமானம் அடுத்து ராய்ப்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் வெடிகுண்டு பிரிவு வல்லுநர்கள் விமானத்தை முழுக்க முழுக்க சோதனை செய்தனர். இருப்பினும், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அந்த இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது பயணி ஒருவரே விமானத்தில் குண்டு இருப்பதாக விமான குழுவிடம் கூறியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதன் பின்னரே விமானம் ராய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.
சிறையில் அடைப்பு: விமான குழுவிடம் அனிமேஷ் மண்டல் என்ற பயணியே இது குறித்துக் கூறியிருக்கிறார். விமானம் தரையிறங்கிய சற்று நேரத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் இப்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ட்விஸ்ட்: ஆனால், அதன் பிறகே இந்த வழக்கில் ட்விஸ்ட் ஏற்பட்டது. அதாவது அனிமேஷ் மண்டல் தான் ஒரு உளவுத்துறை (IB) அதிகாரி என்று கூறியிருக்கிறார். விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தனக்கு மெசேஜ் வந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த தகவலை விமான குழுவினரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர்: இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் பைசல் ரிஸ்வி கூறுகையில், "விமானத்தில் வெடிகுண்டு இருக்கக்கூடும் என்று மண்டலுக்கு மெசேஜ் வந்தது. இதன் காரணமாகவே அவர் பணியாளர்களை எச்சரித்தார். இது குறித்து விமான பைலட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால், போலீசார் மண்டலை கைது செய்தனர்.
அவர் ஒரு உளவுத் துறை அதிகாரி.. தனது கடமையாகவே கருதி இதை அவர் செய்தார். ஆனால், அவரது செயலுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இப்போது சுமார் ஒரு மாதமாக அவர் காவலில் இருக்கிறார். வழக்கு தொடர்பான விசாரணையால் தாமதம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
அடுத்து என்ன: சிவில் விமானப் பாதுகாப்புச் சட்டம், 1982க்கு கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால், சத்தீஸ்கரில் இந்த சிறப்பு நீதிமன்றம் இல்லை. இதன் காரணமாகவே தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications