Budget 2024: நாளை கூடும் நாடாளுமன்றம்- டெல்லியில் மத்திய அரசு கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டம்!
டெல்லி: நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடும் நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த இன்று அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு நடத்தியது. பிப்ரவரி 1-ந் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
17-வது லோக்சபா இறுதி கூட்டத் தொடர் நாளை முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெறும். நடப்பாண்டின் முதல் கூட்டம் என்பதால் நாளை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு தீவிரம்: கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது வண்ணப் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அத்தகைய அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க கூடுதலாக மத்திய தொழிலகப் பாதுகாப்பு வீரர்கள் 140 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முறை நாடாளுமன்றத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் முழு வீச்சில் தீவிரமாக இருக்கும்.
அனைத்து கட்சிக் கூட்டம்: பீகாரில் திடீரென ஏற்பட்ட ஆட்சி மாற்றம், லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைக்கக் கூடும். இதனால் சபை நடவடிக்கைகளை சுமூகமாக நடத்தும் வகையில் இன்று டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு இன்று நடத்தியது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பிப்.1-ல் பட்ஜெட்: நாளை ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து நாளை மறுநாள் பிப்ரவரி 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். லோக்சபா தேர்தலுக்கு பின் அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும். லோக்சபா தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் பரபரப்பான அறிவிப்புகளுக்கு வாய்ப்புகள் குறைவுதான். இருப்பினும் லோக்சபா தேர்தல் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் நிதி உதவி திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications