பட்ஜெட்டில் தமிழ்நாடு எங்கே? நடுத்தர வர்க்கத்தை மீண்டும் ஏமாற்றிய நிதியமைச்சர்!தயாநிதி மாறன் தாக்கு!
டெல்லி: 2025 - 2026 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். இதில் தனி நபர் வருமானம் ஆண்டுக்கு 12 லட்சம் வரை இருந்தால் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி மற்றும் பிஹார் தேர்தலை கொண்டு இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை என திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
2025 - 2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் பிஹார் மாநிலத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது தவிர கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் எதிர்பார்த்த ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நடுத்தர வர்க்கத்தினருக்கான 12 லட்சம் வரை வரிச் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு தனி நபரின் ஆண்டு வருவாய் 12 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வருமான வரி கிடையாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர் இனி வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லி மற்றும் பிஹார் தேர்தலை கொண்டு இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை என திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது மிகவும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட். இந்த பட்ஜெட்டை பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. பிப்ரவரி 5ஆம் டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் டெல்லி வாக்காளர்களை கவரும் வகையில் இந்த பட்ஜெட் திட்டமிடப்பட்டிருக்கிறது.
#WATCH | #UnionBudget2025 | DMK MP Dayanidhi Maran says, "It's a very disappointing Budget. The Budget seems to be like that, it's planned in such a way to woo the voters for Delhi, especially the Delhi elections coming on 5th February. The FM has given a big exemption saying… pic.twitter.com/hQ88jbvR6r
— ANI (@ANI) February 1, 2025
12 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரிய விலக்கு ஒன்றை அளித்திருக்கிறார். ஆனால் 8 முதல் 12 லட்சம் ரூபாய்க்கு 10 சதவீத வரி வரம்பு உள்ளது என்று கூறுகிறார். எனவே இது மிகவும் குழப்பமாக இருக்கிறது. அவர் அளித்துள்ள விபரங்களில் பிசகு இருப்பதாக நான் நினைக்கிறேன். 12 லட்சம் ரூபாய் வரிவிலக்கு அளிப்பதாக வாக்காளர்களுக்கு உறுதியளிக்க முயற்சிப்பதாகவே நான் பார்க்கிறேன்.
ஆனால் இது எளிமையானதாகவும் நேரடியாகவும் இருக்காது. அவர்கள் டிடிஎஸ் மற்றும் மற்ற அனைத்தையும் கேட்க வேண்டி இருக்கும். இது அடிப்படையில் நடுத்தர வர்க்கத்திற்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட். நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் ஒருமுறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஏமாற்றப்பட்டதாக தெரிகிறது. நாட்டின் பிற பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இந்த ஆண்டு பீஹாரில் தேர்தல் நடக்க இருப்பதால் இந்த பட்ஜெட் பீகாரை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அல்லது வேறு எந்த தென் மாநிலங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications