ரூ.1 லட்சம் கோடி இழப்பு.. வருமான வரி விலக்கு அறிவிப்பால் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு?
டெல்லி: மத்திய அரசின் வருமான வரி விலக்கு அறிவிப்பு காரணமாக ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு இனி வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.75 ஆயிரம் கழிவு கிடைக்கும் என்பதால், நடுத்தர மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனி மாத ஊதியம் ரூ.1 லட்சம் வரை பெறுவோர் இனி வருமான வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. ரூ.4 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு எந்த வரியும் இல்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவிகிதமும், ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவிகிதமும் வரிவிகிதம் இருக்கும்.
அதேபோல் ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 15 சதவிகிதம் வரிவிகிதமும், ரூ.16 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 20 சதவிகிதமும், ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் 25 சதவிகிதம் வரிவிகிதமும், ரூ.24 லட்சத்திற்கும் மேல் 30 சதவிகிதமும் வருமான வரிவிகிதம் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி விலக்கு அறிவிப்பு காரணமாக சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் பலனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமான வரி விலக்கு அறிவிப்பு காரணமாக, அரசின் நேரடி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications