நேருக்கு நேர்.. மதுரை எய்ம்ஸை சீக்கிரம் கட்டி முடிங்க.. நிர்மலா சீதாராமனிடம் பட்டென கூறிய பிடிஆர்!
டெல்லி: தமிழ்நாட்டுக்கு 15வது நிதிக்குழுவில் வழங்க வேண்டிய ரூ.2600 கோடி மானியம், சென்னை வெள்ள பாதிப்பை குறைக்கும் பணிக்காக பரிந்துரைத்த ரூ.500 கோடியை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்டியல் போட்ட நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை சீக்கிரம் கட்டி முடிங்க என பட்டென கூறினார்.
2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 2023 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையை துவங்கி உள்ளது.
அதன்படி மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் கடந்த 21ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் வரும் 28 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்! அமைச்சர் ரகுபதி புது விளக்கம்!
பிடிஆர் பங்கேற்பு
இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு தொழில் துறையினர், தொழில் கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று டெல்லியில் நடந்த ஆலோசனையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இந்த கூட்டத்துக்கு பிறகு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வராத ரூ.3,100 கோடி
இந்த கூட்டத்தில் மாநிலம் மாநிலமாக ஒவ்வொருவரும் தங்களின் கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எடுத்து வைத்தோம். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 15வது நிதிக்குழுவில் நமக்கு வர வேண்டிய ரூ.2600 கோடி மானியம் இன்னும் வரவில்லை. அதேபோல் சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்கும் ரிஸ்க் மெட்டிகேஷன் பணிக்காக ரூ.500 கோடி பரிந்துரை செய்யப்பட்டது. அதுவும் வரவில்லை. இதனை வழங்க வலியுறுத்தினேன்.
சென்னை மெட்ரோ பணி
மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தற்போது வரை நாம் மட்டும் தான் முதலீடு செய்து மாநில திட்டமாக செயல்படுத்தி வருகிறோம். இதில் மத்திய அரசின் 50 சதவீத பங்கு உள்ளது. அதற்கான முதலீட்டை கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டேன். தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் ரயில் திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனை செயல்படுத்த வேண்டும் என கூறினேன்.
மதுரை எய்ம்ஸ்
அதேபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை சீக்கிரமாக கட்டி முடிக்க வேண்டும் எனவும், திருப்பூர் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இறுதியாக இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கூறினேன். நாட்டில் மிகப்பெரிய பர்னிச்சர் பார்க் தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து ஏற்றுமதி செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் மரம் என்பது தேவையானதாக உள்ளது. இதனால் மரம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் இறக்குமதி வரியை குறைத்தால் நன்றாக இருக்கும் என தமிழ்நாடு சார்பில் கோரிக்கை வைத்தேன்'' என்றார்.