மேக தாது அணை பற்றி விவாதிக்க தமிழகம் எதிர்ப்பு! 3-வது முறை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ரத்து!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதே இதற்கு காரணமாகும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நாளை நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.

காவிரி ஆணையம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுடன் அக்கூட்டத்தில் மேகதாது அணை குறித்தும் விவாதிக்கப்படும் என்று ஆணையம் கூறி இருந்தது. இதனையடுத்து, மேகதாது அணை பற்றி விவாதம் கூடாது என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து அந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு ஜூன் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

மீண்டும் மாற்றம்
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக இருக்கும் எஸ்.கே.ஹெல்தர் மேகதாது அணை விவகாரத்தில் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் என கடும் எதிர்ப்புகள் தமிழகத்திலிருந்து கிளம்பியதால் அந்தக் கூட்டமும் இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டு ஜூலை 6-ஆம் தேதியான நாளைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்போது மூன்றாவது முறையாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் ரத்து செய்யப்பட்டு மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் எதிர்ப்பு
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதே இதற்கு காரணமாகும். மேகதாது அணை பற்றி பேச காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எந்த உரிமையும் இல்லை எனக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதியிருக்கிறார்.

16-வது கூட்டம்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்திலோ இக்கூட்டம் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது..












Click it and Unblock the Notifications