நடிகை ஸ்ரீதேவி மர்ம மரணம்.. மோடி,ராஜ்நாத் சிங் கடிதங்களா? பெண் யூடியூபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை
டெல்லி: நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் என காகிதங்களை காட்டி தொடர்ந்து சந்தேகம் கிளப்பி வந்த பெண் யூடியூபர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வந்த அவர், 6 ஆண்டுகளுக்கு முன் துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் சென்று இருந்த அவர், அங்கு உள்ள ஓட்டல் ஒன்றின் குளியலறையில் இறந்து கிடந்தார். குளியலறை பாத் டப்பில் நீரில் மூழ்கியபடி அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. பல்வேறு ஊடகங்கள், யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்களில் ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக பலர் சந்தேகங்களை கிளப்பி இருந்தன. குறிப்பாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரை சேர்ந்த தீப்தி பின்னிதி என்பவர் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ரீதேவி விவாதங்களில் பங்கேற்று பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.
அவர் ஸ்ரீதேவி மரணத்தில் இருக்கும் மர்மங்களை இரு அரசுகளும் மூடி மறைப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக தான் தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொண்டு, இந்த மர்மங்களை கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்து இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரது கடிதங்கள் என்று கூறி சில கடிதங்களையும், உச்சநீதிமன்ற ஆவணங்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆவணங்கள் என்ற பெயரில் சிலவற்றையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த சாந்தினி ஷா என்ற வழக்கறிஞர் தீப்தி பின்னிதி மீது பிரதமர் அலுவலகத்துக்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதன் பேரில் பிரதமர் அலுவலகம் சி.பி.ஐ. விசாரணைக்கு அதை அனுப்பி வைத்தது. அதன் அடிப்படையில் தீப்தி பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் பாரத் சுரேஷ் காமத் ஆகியோருக்கு எதிராக கடந்த ஆண்டு, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, தீப்தி பின்னிதி வீட்டில் சோதனை மேற்கொண்டது. அப்போது அவரது வீட்டில் இருந்த செல்போன், லேப்டாப் போன்றவற்றை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.
இந்த நிலையில் தற்போது டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தீப்தி பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் காமத் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருக்கிறது. ஸ்ரீதேவி மர்ம மரணம் தொடர்பாக பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் ஆகியோரின் கடிதங்கள் என தீப்தி தாக்கல் செய்த அனைத்து ஆவணங்களும் போலி என்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வேன் என தீப்தி தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications