சிலை கடத்தல் விவகாரம்! குற்றவாளியை தப்ப வைத்ததாக புகார்.. பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப்பதிவு
டெல்லி: சிலை கடத்தல் விவகாரத்தில் விசாரணையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் சிபிஐ முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல முக்கிய கோயில்களில் இருக்கும் பழம்பெரும் சாமி சிலைகள் மாயமாவதாக எழும் புகார்களை பொதுவாகச் சிலை கடத்தல் பிரிவு போலீசார் தான் இதை விசாரிப்பார்கள்.
இதற்கிடையே முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் குறித்து விசாரணை நடத்திய போது, அதில் முறைகேடு நடந்தாக எழுந்த புகாரில் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்பான வழக்குகள்.. ஹைகோர்ட்டில் பொன் மாணிக்கவேல் கூடுதல் மனு
புகார்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய சாமி சிலைகளைச் சர்வதேச கடத்தல்காரர்களுடன் இணைந்து கடத்தியதாக முன்னாள் திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி காதர் பாஷா மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். இதற்கிடையே முக்கிய குற்றவாளியைத் தப்பிக்க வைக்கத் தான் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
குற்றவாளியைத் தப்பிக்க வைக்க முயற்சி
பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தீனதயாளனை தப்பிக்க வைக்க அப்போதைய சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் அவருடன் கூட்டுச் சேர்ந்ததாகவும் பழிவாங்கும் நோக்கில் தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கச் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேல்முறையீடு
இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்த சிபிஐ விசாரணை உத்தரவுக்குத் தடை கோரியுள்ள பொன்.மாணிக்கவேல், இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதி கிருஷ்ணா முராரி அமர்வு விசாரிக்கும் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சிபிஐ
இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில், சிபிஐ இந்த விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. பழவலூரில் 13 கோயில் சிலைகள் திருடப்பட்ட வழக்கில் முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகி உள்ளதாகவும் இதன் காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
வழக்குப்பதிவு
அதாவது முக்கிய குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் நோக்கில் பொன்.மாணிக்கவேல் செயல்பட்டதாகவும் இதன் காரணமாகவே தன் மீது பொய் புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் காதர் பாஷா தனது புகாரில் தெரிவித்து இருந்தார். முதற்கட்ட விசாரணையில் விசாரணையில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகியுள்ளதாலேயே அவர் மீது இப்போது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
பரபரப்பு
அதேநேரம் சிபிஐ விசாரணைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனு மீது இன்று விசாரணை வரவுள்ளது. இந்தச் சூழலில், விசாரணைக்கு ஒரு நாள் முன்னதாக யாரும் எதிர்பார்க்காத வகையில் பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.