DEEP FAKE - பேஸ்புக், கூகுளுக்கு சம்மன்.. நடிகை ராஷ்மிகா போலி ஆபாச விடியோ விவகாரத்தில் அரசு ஆக்ஷன்
டெல்லி: ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளின் போலி ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக பேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்கள் ஆஜராகி விளக்கமளிக்க மத்திய அரசு சம்மன் அனுப்பி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்த முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. விஜய் நடித்த வாரிசு, கார்த்தி நடித்த சுல்தான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்று எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அதிகளவில் பரவி வருகிறது.

லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளி இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜாரா பட்டேலின் வீடியோ எடுத்து ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து எடிட் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். ஏஐ தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோ டீப் ஃபேக் என்று அழைக்கப்படுகிறது. உண்மை போன்றே தெரியும் போலி வீடியோவான இது தற்போது உலகளவில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி இருக்கிறது. போட்டோஷாப் போன்ற செயலிகள் மூலம் முன்பு புகைப்படத்தில் முகத்தை மாற்றி எடிட் செய்து வெளியிட்டு வந்தனர்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இதுபோன்ற போலி ஆபாக வீடியோக்களை தயாரித்து சில சமூக விரோதிகள் வெளியிட்டு விடுகின்றனர். இப்படி உண்மை போன்றே சமூக வலைதளங்களில் பல போலி வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் ராஷ்மிகா மந்தனா வீடியோவையும் எடிட் செய்து பரப்பி இருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், " டீப் பேக் வீடியோக்கள் மிக மிக மோசமானவை. பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு இணைய பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. ஐடி விதிகளின்படி சமூக வலைதளங்களில் உண்மையான பதிவுகள் பகிரப்படுகிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். தவறான தகவல்களை 36 மணி நேரத்திற்குள் நீக்கம் செய்ய வேண்டும். இந்த விதிகளின் கீழ் நிறுவனங்கள் செயல்படாவிட்டால் ஐபிசி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இது தொடர்பாக தன்னுடைய வேதனையை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் டெல்லி போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் டெல்லி போலீஸ் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 24 ஆம் தேதி மத்திய எலெக்டிரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இது தொடர்பாக ஆலோசிக்க உள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெடா மற்றும் கூகுளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications