உள்நாட்டு விமான சேவைகளில் இருக்கை கட்டுப்பாடுகள் அக்.18 முதல் முழுமையாக தளர்வு
டெல்லி: கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான சேவைகளில் இருக்கைகள் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் வரும் 18-ந் தேதி முதல் முழுமையாக தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து உள்நாட்டு விமான சேவைகள் முன்னரைப் போல கட்டுப்பாடுகள் இல்லாமல் இயக்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு விமான சேவைகளிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. கடந்த மார்ச் 25-ல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட போது இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
உள்நாட்டு விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. சிறப்பு விமானங்கள், சரக்கு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டும் வந்தன. சுமார் 2 மாத காலத்துக்குப் பின்னர் உள்நாட்டு விமான சேவை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டது.
அதாவது உள்நாட்டு விமான சேவைகளில் 54% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதுதான் தற்போது வரை பின்பற்றப்பட்டும் வருகிறது. அதேபோல் கொரோனா பரவலைத் தடுக்க முக கவசம் அணிவது உள்ளிட்டவை கட்டாயமாகவும் பின்பற்றப்பட்டும் வருகிறது. முதல் கட்டமாக நாடு முழுவதுமே 870 விமானங்கள் இயக்கப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறைய குறைய இந்த எண்ணிக்கை சற்று அதிகரிக்கப்பட்டு வந்தது.
இருந்த போதும் இதுவரை உள்நாட்டு விமான சேவைகள் முழுமையாக மொத்தம் 100% என்ற அளவில் தொடங்கப்படவில்லை. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பும் மிக மிக குறைவாக இருந்து வருகிறது. கேரளாவில்தான் ஒருநாள் பாதிப்பு சற்று கூடுதலாக இருந்து வருகிறது. இருந்தபோதும் கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் கேரளாவில் கொரோனா பரவல் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டிருக்க்கிறது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காலங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டும் வருகின்றன.
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட 3 காரணங்கள்! எப்போது சரியாகும்? சீனாவில் நடப்பது என்ன?
இதன் ஒருபகுதியான உள்நாட்டு விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 18-ந் தேதி முதல் இருக்கை கட்டுப்பாடு உள்ளிட்டவைகள் எதுவும் இல்லாமல் முழுமையான 100% இருக்கை வசதிகளுடன் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் முழுமையாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளது.