டெல்லியில் விவசாயிகள் போராட்டம்- மத்திய அரசுடன் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசு போராடும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.
இந்த நிலையில் 3 விவசாய சட்டங்களை செயல்படுத்த உச்சநீதிமன்றமும் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதனிடையே இன்று விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 9-ம் கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசு நடத்துகிறது.
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணியை நடத்துவோம் என விவசாய சங்கங்கத்தினர் ஏற்கனவே அறிவித்தும் உள்ளனர். இன்றைய பேச்சுவார்த்தையில் இந்த விவகாரம் முக்கியமான பேசுபொருளாக இருக்கக் கூடும் என தெரிகிறது.
விவசாயிகள் போராட்டம்... ஹரியானா பாஜக அரசுக்கு ஆபத்து? பிரதமரை சந்திக்கும் ஹரியானா துணை முதல்வர்
மேலும் உச்சநீதிமன்றத்தில் விவசாய சட்டங்களை செயல்படுத்தியாக வேண்டும் என மத்திய அரசு கருத்து தெரிவித்திருந்ததை விவசாயிகள் இன்றைய பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் எனவும் தெரிகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் போராட்டம் தொடருமா? முடிவுக்கு வருமா? என்பதும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.