''வேற வழியில்லை.. கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக்குங்க''.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும் என்று மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
மெத்தனப் போக்குடன் நடந்து கொள்ளும் மக்களிடம் கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா தனது ஆட்டத்தை தொடங்கி விட்டது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு 30,000-ஐ நெருங்கும் நிலைக்கு வந்து விட்டது. மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் நாட்டின் மொத்த பாதிப்பில் 86% பதிவாகி உள்ளது.
இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும் என்று மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில், ' கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
எனவே தேவையான கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநிலங்கள் கடுமையாக அமல்படுத்த வேண்டும். பொது இடங்களில் விழிப்புணர்வு இல்லாமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்ளும் மக்களிடம் கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அஜய் பல்லா கூறியுள்ளார்.