அதிகரிக்கும் கொரோனா.. மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு ரத்து
டெல்லி: கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதால் மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு நடைமுறை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது என மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பில் அக்கறை இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்த வருகை பதிவுக்கான பயோமெட்ரிக்கில் விரலை ஒவ்வொருவரும் வைத்துக் கொண்டே இருந்தால் அதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் தொடங்கியவுடன் பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பயோமெட்ரிக்கில் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டிருந்தது.

பயோமெட்ரிக் முறை ரத்து
ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்த பயோமெட்ரிக் வருகை பதிவு கொரோனா கட்டுக்குள் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யும் முன்னர் அனைத்து ஊழியர்களும் கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பயோமெட்ரிக் முறையை மத்திய அரசு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளது.

ஓமிக்ரான் பரவல் அதிகம்
இந்தியாவில் கொரோனாவின் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி முதல் ஓமிக்ரான் பரவல் தொடங்கியது. இந்தியாவில் இதுவரை 1700 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 639 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

ஓமிக்ரான் கேஸ்கள்
இந்தியாவில் 510 ஓமிக்ரான் கேஸ்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த 351 கேஸ்களுடன் டெல்லி உள்ளது. கேரளாவில் 29 பேருக்கு ஓமிக்ரான் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அங்கு 181 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் ஓமிக்ரான் பல மாநிலங்களில் சமூக பரவலாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசி
இதற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கியது.












Click it and Unblock the Notifications