கொரோனாவை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு- டெல்லி விவசாயிகள் பரபர புகார்
டெல்லி: கொரோனா பரவலை பயன்படுத்தி டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்கலாம் என மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம்ம்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இடைவிடாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர் விவசாயிகள்.

டெல்லியின் எல்லைகளில் நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்தை கொரோனா பரவலை முன்வைத்து முடிவுக்கு கொண்டுவரலாம் என மத்திய அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் கூறியதாவது:
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் எல்லைகளில் கொரோனா கால கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் கொரோனா பரவல் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். கொரோனா பரவுகிறது என்பதை காரணமாக வைத்து எங்கள் போராட்டத்தை முடிக்க வைக்கலாம் என மத்திய அரசு நினைக்கிறது.
கடந்த ஆண்டும் கூட இதேபோலவே முயற்சித்தார்கள். ஆனால் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறினார்.












Click it and Unblock the Notifications